வியாழன், 17 டிசம்பர், 2009

கடவுளின் எண்



















நீர்மட்டத்துக்குமேல்
திவலைகள் உருண்டிறங்கும்
இடதுகை மட்டும் தெரிய ஒருவன்
குளத்தில் மூழ்கும் காட்சி
அவ்வப்போது கனவில் படர்ந்து
தூக்கம் முறிகிறது.

எல்லாரும் பார்த்திருக்க மூழ்கியவனின்
கடைசி வார்த்தைகள்
ஆழத்திலிருந்து குமிழிகளாய் உயர்ந்து
மேற்பரப்பில் மிதந்தன.

படியருகே அலைந்த மீன்கூட்டம்
இரை என்று விரைந்து
குமிழிகளைக் கொத்தி உடைத்தன
சிதறிய வார்த்தைகள் நீர் வட்டங்களாகக்
குளமெங்கும் பரவின
சதுரக் குளத்தைத் தாண்டிய வட்டங்கள்
கையணையில் தலைசாய்த்துறங்கும்
கரைப் பெருமானின் கால்களைத் தீண்டின
ஈர மொழியில் முறையிட்டன

அறிதுயிற் பெருவிழிகள் மெல்லத் திறந்து
இடது கையால் பாதம் சொறிந்த பின் - அவர்
மேனியை நீட்டி மீண்டும் கிடந்தார்
இரவு மேகம் இறங்கியதுபோல்
மெல்ல அடைந்தன தாமரைக் கண்கள்

கடவுளின் விழிகளே மூடிய பின்னர்
நமக்கென்ன என்று எல்லாரும் தவிர்த்தனர்
எல்லா முகத்திலும் கடவுளின் நிர்க்குணம்
எல்லா நடையிலும் குற்றத் தடுமாற்றம்

இறந்தவன் மிதந்து கரை மீட்டபோது
இடதுகையைக் கவனமாய்ப் பார்த்தேன்
உள்ளங்கையில்
பெயரோ எண்ணோ
எழுதிய சுவடு கலைந்த மிச்சம்

என் பெயரல்ல
என் எண்ணல்ல
பார்த்த எல்லாரும் நிம்மதியடைந்தோம்

அவ்வப்போது கனவில் தெரியும்
இடது உள்ளங்கையில் கறைபோலிருப்பது
யார் பெயர், யார் எண்?
நெருங்கிப் பார்க்க முற்படும் முன்பே
தூக்கம் முறிக்கும் கனவு
குற்றம் உணர்த்தும் நெஞ்சு

ஒருவேளை
கடவுளின் பெயரோ எண்ணோ ஆக
இருக்கக்கூடுமோ அது?

1 கருத்து:

  1. வணக்கம்
    உங்களின் வலைப்பூவிற்கு இன்றுதான் வந்தேன். அனைத்தையும் படித்தேன். உங்களின் தவளை
    பற்றிய கவிதையை எனது நண்பன் ஒருவரி விடாமல் சொல்வான் இன்றும். இதை உங்களிடம் நேரடியாக சொல்லியிருக்கிறேன்(மதுரை கடவு நிகழ்ச்சியில்). இன்று வரை பிடித்த கவிஞர்களில் நீங்கள் ஒருவர். எனது பயணங்களில் எடுத்து செல்லும் புத்தங்களில் பூமி வாசிக்கும் சிறுமியும் ஒன்று. திசைகளும் தடங்களும் சென்னை புத்தககண்காட்சியில் வாங்கவேண்டும். இப்பொழுது எல்லாம் நீங்கள் கவிதை எழுதுவது இல்லையே என்ற தாகத்தை இந்த வலைப்பூ போக்கிற்று, நன்றி ,
    இனி நானும், நாளும் தொடர்வேன்

    பதிலளிநீக்கு