செவ்வாய், 11 அக்டோபர், 2011

வம்ச புராணம்



பூர்வ ஜென்மத்தில் நாங்களெல்லாம்
கழுதைகளாக இருந்தோமாம்

பரண்பொருட்களுக்கிடையில்
பூசணம் பூத்துப் பதுங்கிக் கிடக்கும்
பழஞ்சுவடி ஆதாரம்
அவரவர்
இருப்பும் நடப்பும் அத்தாட்சி

எப்போதும் உண்மை
அதிர்ச்சியை அதிரச் செய்வது
எனினும் ஒருவேளை
சரியாகவும் இருக்கலாம்

குதிரையாக மாறும் முன்பு
விடுபட்ட பிறவி
கழுதையாகப் பரிணமித்ததுபோல
பிசாசாகவோ கடவுளாகவோ மாறுவதற்கிடையே
மனிதர்களாகத் திரிக்கப்பட்டவர்கள் நாங்கள்

சொல்லக் கேட்ட பாட்டனின்
பார்த்துப் பழகிய அப்பனின்
பார்த்துப் பார்த்து அலுத்த என்
முகங்களில் தெரிகிறது
கைவிடப்பட்ட விலங்கின் துயரம்
கண்களில் ததும்புகிறது
வழிந்து விடாத அப்பிராணிக் கண்ணீர்

எனவே
பழஞ்சுவடிச் சான்று ஒருவேளை
உண்மையாகவும் இருக்கலாம்

ஏழாம் பிறைபோல எனக்கும்
ஐந்தாம் பிறைபோலத் தந்தைக்கும்
மூன்றாம் பிறைபோலத் தாத்தாவுக்கும்
கழுதைக் கூன் முதுகுகளாம்

முதிர்ந்தவர் வார்த்தை ஒருவேளை
மெய்யாகவும் இருக்கலாம்

பாட்டன் சுமந்தது உப்பு மூட்டை
அப்பன் சுமந்தது பஞ்சுப்பொதி
நான் சுமப்பது மண்பாரம்

எனினும்
எங்களை விட அதிகம் சுமந்தாலும்
கழுதையின் முதுகில் கூன் விழவில்லை,
ஏன்?

















3 கருத்துகள்:

  1. //ஏழாம் பிறைபோல எனக்கும்
    ஐந்தாம் பிறைபோலத் தந்தைக்கும்
    மூன்றாம் பிறைபோலத் தாத்தாவுக்கும்
    கழுதைக் கூன் முதுகுகளாம்
    // மிக மிக அட்டகாசமான வரிகள் ஆழமாய் யோசிக்க வைக்கிறது.
    பொதி சுமந்த கழுதை
    பாரம் சுமக்கும் மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  2. வழக்கம் போல நிறையப் பொறாமையுடன் படித்து உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்தேன்

    பதிலளிநீக்கு