வெள்ளி, 27 ஏப்ரல், 2012


ஏப்ரல் 28 - சர்வதேச தவளைகள் பாதுகாப்பு நாள்




தவளை மொழி


@


எனது புறநகர்க் குடியிருப்பு
வயல்களின் சமாதி என்று
நினைவுபடுத்தியவை தவளைகளே

மழைவாசனை
எப்படியோ தெரிந்து விடுகிறது தவளைகளுக்கு
முதல்துளி விழுந்ததும்
எங்கிருந்தோ வந்து விடுகின்றன

யாரும் அவற்றிடம் கேள்வி கேட்பதில்லை
எனினும்
ஓயாமல் பதில் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன
க்ராக்... க்ராக்...க்ராக்...க்ராக்

சாஸ்திரக் குரலில் சுலோகம் சொல்லி
மழையிரவுகளைத்
தள்ளி நகர்த்துபவை
தவளைகள் மட்டுமே

மழை மறைந்த பொழுதுகளில்
கட்டிடங்களில் ஆழ இருளில் மூச்சுத் திணறும்
விதைகளுக்காக
சுற்றுச்சூழல் பாதுகாப்பாளனின் பதற்றத்துடன் வாதடுகின்றன

மண்ணை விரும்பும் ஈரஜீவிகள்
தவளைகள் தவிர வேறில்லை

எப்போதும் தவளைகள்
பாடம் எனக்கு

முன்பு
ஆய்வுக்கூட மேஜையில்
மல்லாந்து மயங்கிய ஒரு தவளை
கற்றுக் கொடுத்தது
உயிரின் விஞ்ஞானத்தை
மரணத்தின் அமைதியை

இப்போது
வாசற்படி தாண்டிவந்த ஒரு தவளை
கற்றுக் கொடுக்கிறது -
பிழைப்பின் சூத்திரத்தை

'' நாங்கள்
நீர்ல் எதார்த்தவாதிகள்
நிலத்தில் சந்தர்ப்பவாதிகள்''


(1997)

2 கருத்துகள்:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_30.html) சென்று பார்க்கவும்...

    நன்றி…

    பதிலளிநீக்கு