திங்கள், 22 ஜூலை, 2013

தன் நெஞ்சு அறிவது




லுவல் நிமித்தமாக விசாகபட்டினத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் தங்க நேர்ந்தது. சென்னையிலிருந்து அனுப்பிய  சரக்கை அந்த ஊர்  விநியோகஸ்தர்  எடுக்காமல் விட்டிருந்தார். வங்கி மூலம் அனுப்பப்பட்ட சரக்கு. அதை எடுப்பதற்கான  கெடு முடிந்து விட்டதால் நிறுவனத்தின் பிரதிநிதியாகப் போக வேண்டிருந்தது. வங்கியிலிருந்து தஸ்தாவேஜுகளை வாங்கித் தந்தால் சரக்கை எடுப்பதாக விநியோகஸ்தர் சொல்லியிருந்தார். வங்கியிலிருந்து அவற்றைத் திரும்பப்  பெற்றுக் கையில் வைத்துக் கொண்டிருந்தபோது விநியோகஸ்தர் கையை மலர்த்தினார். நிதிநெருக்கடி. திடீரென்று வந்து  சொன்னால் ஆயிரக்கணக்கான ரூபாயைப் புரட்ட முடியுமா  என்று எதிர்க் கேள்வி கேட்டார்.  நிறுவனமோ அந்த பில்லைக் கிளியர் செய்யாமல் சென்னைக்குத் திரும்பாதே என்று கறாராகச் சொல்லியிருந்தது.

கையைப் பிசைந்துவிழிப்பதைப் பார்த்த விநியோகஸ்தர் பரிதாபப்பட்டு மாற்றுத் திட்டத்தைச் சொன்னார். 'இரண்டு நாட்களுக்குள் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். அதுவரைக்கும் இங்கேயே இருங்கள். இன்றைக்குப் புதன். சனிக் கிழமை வங்கி மூடுவதற்குள் பில்லைக் கிளியர் பண்ணி விடுகிறேன். காசைக் கையோடு வாங்கிக் கொண்டு இரவு ரயிலேறி விடலாம்'. வேறு வழியில்லை. ஒப்புக்கொண்டேன். மத்தியானம்வரை அந்த அலுவலகத்தில் பராக்குப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். உணவு இடை வேளையின்போது விநியோகஸ்தரே பணியாளர் ஒருவரை அழைத்து எனக்குத்  தங்குமிடத்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். கடற்கரைச் சாலையில் ஷிப்யார்டுக்குப் பக்கத்தில்  இடுங்கிய ஒரு தெருவில் நெரிசலான ஒரு சந்தில் மிகச் சுமாரான ஒரு லாட்ஜுக்கு , பெயர் - சர்தாம் லாட்ஜ் -  அழைத்துப் போனார்  பணியாளர் .

வைசாக மன்னன் காலத்தில் சத்திரமாக இருந்திருக்கும் என்று நினைக்க வைத்த புராதனக் கட்டடம். இரண்டு தளம்.விசாலமான அறைகள் பிளைவுட் தடுப்புகளால் பிரித்து அமைக்கப்பட்டிருந்த எட்டுக்கு எட்டு அளவு அறைகள்.  துருப்பிடித்த கட்டில். அழுக்கு மெத்தை. அலுமினியத் தண்ணீர்க் குவளை. அந்த விடுதியில் நவீனமாகத் தென்பட்ட ஒரே  சாதனம்  வரவேற்பறையில் வைத்திருந்த சாலிடேர்  வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மட்டுமே. இந்த ஆதிவாசிக் குகையில் தங்குவதை விட ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஒண்டுவது  சௌகரியமானது என்று பட்டது. ஆனால்  நாலு நாட்கள் பிளாட்பாரத்தில் குடியிருக்க முடியாது. இதை விடக் கொஞ்சம் வசதியான விடுதி கிடைக்குமா என்று உடன் வந்தவரிடம் அரைகுறைத் தெலுங்கில் விசாரித்தேன்.

'' ஏண்ட்டி சார், இதி ஒத்தா? சாலா மஞ்சி லாட்ஜ் சார். அரவாடு அன்னி இங்கடெனெ ஒஸ்தாரு சார். மதராஸ் மீல்ஸ் தொரக்கிந்தி சார்'' என்று விடுதி மகாத்மியம் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த வரவேற்பாளர் '' சாரு தமிழா? நம்பாளுங்கல்லாம் இங்கதான் வருவாங்க சார். வளக்கமா ரூம் கெடக்காது. ஒங்க லக்கு இன்னிக் குன்னு  ரூம் காலியா இருக்கு. உள்ளயே ரெஸ்டாரெண்டே இருக்கு. நம்ப ஊர் சாப்பாடு.  இங்க வர அல்லா கம்பெனி ரெப்செண்டீவும் நம்ம கஸ்டமர் தான். நம்ம லாட்ஜ்தான் சார் சீப் அண்ட் பெஸ்ட்'' என்று நீளமாகப் பேசினார்.

கையிருப்புக் குறைவு. கம்பெனி அளக்கிற தினப்படியில் பெரிய இடங்களில் தங்குவது முடியாத காரியம். விநியோகஸ்தர் சனிக்கிழமை ரொக்கமாகவே கொடுப்பார் என்ற நம்பிக்கையில் செலவு செய்யலாம். ஆனால் ஊர் திரும்பி அதைச்  சரிக்கட்டுவது மேலும் சிரமம். நிதிநிலைமையை மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தேன். இதே லாட்ஜில் தங்கினால் சென்னை  திரும்பி ஒரு வாரம்வரைக்கும் தட்டுப்பாடில்லாமல் செலவு செய்யத் தேவையான பணம் மிஞ்சும். சரி சொல்லி விடலாம்  என்ற எண்ணம் ஓடியது. கூடவே வரவேற்பாளரின் வார்த்தைகளும் ஓடின. அவர் தலைக்கு மேலாகச் சுவரில் பதித்திருந்த  சாவிப் பலகையைப் பார்த்தேன்.பதினாறு அறைகள். விசிட்டிங் கார்டு செருகிவைக்கும் சின்னச் சட்டங்களில் இரண்டைத்  தவிரப் பெரும் பான்மை யும் காலியாக இருந்தன.ஆட்களே வராத விடுதியா, இல்லை விவகாரமான தங்குமிடமா என்று  குழம்பினேன். யோசித்துக் கொண்டே இருந்தால் முடிவே இருக்காது என்று தோன்றிய அடுத்த நொடி ''ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர்ல ரூமிருக்கா?''  என்று கேட்டேன். வரவேற்பாளர் எழுந்து பலகையிலிருந்து 108 ஆம் எண் சாவியை எடுத்தார்.'' லக்கி நம்பர் சார், நைன். கார்னர் ரூம், வா சார்'' என்று கௌண்டரை விட்டு வெளியே வந்து எனது லக்கேஜை எடுத்துக்  கொண்டு படியேறினார். விநியோகஸ்தரின் ஆள் கடமை முடிந்த திருப்தியில் ''ஒஸ்தானு சார்'' என்று படியிறங்கினார்.

இந்தப் பாடாவதி அறையில் நான்கு நாட்களை எப்படிக் கழிப்பது என்று யோசித்தேன். முடிக்க வேண்டிய வேலை எதுவும் இல்லை. விநியோகஸ் தரை சரக்கு எடுக்கச் செய்வது மட்டுமே எனக்கிருக்கும் பொறுப்பு .அதைச் சனிக்கிழமை  செய்து தருவதாக உறுதி கொடுத்திருக்கிறாரே, சனிக் கிழமை வேலையைச் சனிக்கிழமை பார்த்துக் கொள்ளலாம்.அதுவரை? சுற்றுலாப் பயணியாக ஊரைச் சுற்றலாம். வரவேற்பாளரிடம் விசாரித்தேன். வழிகாட்டி யின் தேர்ச்சியுடன்  ஊரை வர்ணித்தார். பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிச் சொன்னார். அதற்கிடையில் தன்னுடைய சுயசரிதையையும் கலந்து விட்டார்.

பெயர் ரமேஷ். இல்லை ரமேஸ். ஊர் பொன்னேரி. வேலை தேடி விசாகப் பட்டினம் கப்பல் தளத்துக்கு வந்தவர் அங்கும்  இங்கும் அல்லாடி சர்தாம் லாட்ஜில் ரூம் பாயாக வேலை பார்த்துப் பத்து வருடங்களில் மானேஜர் ஆகி விட்டார். நன்றாக நடந்த லாட்ஜ்தானாம். உரிமையாளர்களுக் கிடையிலான சொத்துத் தகராறில் இந்த நிலைமைக்கு வந்து விட்டிருக்கிறது.''கேஸ் நடக்குது சார். நம்ம ஓனர் கெலிச்சிடுவாரு'' என்று நம்பிக்கையுடன் சொன்னார். அவரே போய் சலவை விரிப்பை எடுத்து வந்தார். '' ஒரு பாய் இருக்கான் சார். அவுனுக்கா தோணினா வருவான். மத்தபடி மேனேஜ் மெண்ட், ரூம் சர்வீஸ் அல்லாம் நாம்பதான். ரெஸ்டாரெண்ட் இருக்கு. ஒரு வேலூர்க்காரரு லீசுக்கு எடுத்து நடத்திகினுருக்காரு. இன்னா ஓணுமோ நம்ப கைல சொல்லு சார். பண்றேன். இன்னா ஓணும்னாலும் சொல்லு'' என்று  கடைசி வாக்கியத் துக்கு அழுத்தம் கொடுத்தார். '' சரி'' என்று முனகினேன். அது அவருக்கு உற்சாகக் குறைவைக் கொடுத்திருக்க வேண்டும். ''சர்தான் சார், நீ ரெஸ்ட் எடு'' என்று நகர்ந்தார்.

வெள்ளாவி வாடை மாறாத படுக்கை விரிப்பில் சரிந்தது நினைவிருந்தது. எழுந்து பார்த்தபோது எட்டு மணி இரவின்  இருள் கவிந்திருந்தது. கடற் காற்றின் கவிச்சை வாடையும் இரும்பு உருகும் வாசனையும் கலந்த காற்று அறைக்குள்  சுழன்றது. மத்தியானத்திலிருந்து தூங்கி விட்ட குற்ற உணர்ச்சியுடன் எழுந்தேன். அதை ஈடு கட்டுவதுபோலப்  பரபரப்பாகத் தயாராகி அறையை விட்டு வெளியேறினேன். வரவேற்பறையில் '' இன்னா சார் நல்லா ரெஸ்ட் எடுத்தியா?'' என்று ரமேஸ் கேட்டபோது ஏனோ வெட்கமாக இருந்தது. அங்கேயே உட்கார்ந்து அன்றைய ஆங்கில நாளிதழில் திரைப்படக் கொட்டகைகளைத் தேடினேன். காப்பி வரவழைத்துக் குடித்தேன். உண்மையிலேயே பேஷான  காப்பி. சித்ராலயா தியேட்டர்.படம் தோஃபா. இந்தி. ஜிதேந்திரா,ஸ்ரீதேவி,ஜெயப்ரதா என்று கண்ணில் விவரங்கள் தட்டுப் பட்டன. ரமேசிடம் கேட்டேன்.

'' சித்ராலயாவா சார், அது இங்கேர்ந்து இன்னா ஒரு ஒண்ணரைக் கிலோ மீட்டர் இருக்கும்.ஜகதம்பா ஜங்சன்னு கேளு. ரிக்சால பத்து ரூவா''

அப்போதுதான் லாட்ஜ் வாசலில் வந்து நின்ற ரிக்ஷாவை விட்டு இறங்கிய  பெண்ணைப் பார்த்தேன்.பழக்கப்பட்டஇடத்தில் புழங்கும் சுவாதீனத்துடன் உள்ளே வந்துகொண்டிருந்தாள். நானிருந்ததற்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்தா ள். நான் சட்டென்று எழுந்தேன். ''பரவாலேது, மீரு கூச்சோண்டி'' என்று சிரித்து விட்டு ரமேசிடம் திரும்பினாள். அவரிடம் தெலுங்கில் கேட்டது தோரயாமாக விளங்கியது. 'இன்று வேலை ஏதாவது இருக்கிறதா? நான் இருக்கவா, வேறு இடத்துக்குப் போகவா?'. அவளுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக என்னிடம் சொன்னார்.'' சார், அதா நிக்குற ரிக்சால ஓணும்னா போயிரு சார். நம்பாளுதான்''. சற்றுத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. வந்து சேர்ந்திருப்பது ஏடாகூடமான இடம்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அறையைக் காட்டியபோது 'இன்னா ஓணும்னாலும் சொல்லு  சார்' என்று ரமேஸ் வலியுறுத்திச் சொன்னதன் அர்த்தம் புரிவதுபோல இருந்தது. மாட்டிக் கொண்டேன் என்ற நினைப்பில் வயிறு கனத்தது. முகம் வியர்த்தது. மொழி புரியாத இடத்தில் அசந்தர்ப்ப மான வேளையில் இன்னொரு தங்கு மிடத்தைத் தேட முடியாது என்ற உண்மை கால்களை நடுங்க வைத்தது. விநியோகஸ்தரைத் தொடர்பு கொள்வதும் காலையில்தான் சாத்தியம். உள்ளுக்குள் உதறிக் கொண்டி ருந்தது. அப்போதைக்கு அந்த இடத்தை விட்டுப் போய் விட வேண்டும். நிதானமாக யோசிக்க வேண்டும். எழுந்தேன். அறைச் சாவியை ரமேசிடம் கொடுக்காமல்பாக்கெட்டிலேயே  வைத்துக் கொண்டேன். பதற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் '' சினிமா முடிஞ்சு வரும்போது கதவு தெறந்திருக்குமில்ல?'' என்று அவரிடம் கேட்டேன். '' பதினோரு மணிவரிக்கும் தெறந்துதான் இருக்கும் சார். அதுக்கப்புறம் தோ அந்த சைடு டோர் தெறந்து வரலாம்''. வெளியே நகரும் முன்பு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். எங்கேயோ பார்த்தது போன்ற முகம். மாநிறம். திருத்தமாக வாரிய தலை. சூடிய மல்லிகைச் சரத்தின் ஒரு இணுக்கு மட்டும் இடது முன் தோளில் விழுந்திருந்தது. பார்வையில் அப்பாவித்தனமும் தந்திரமும் கலந்திருப்பது போல இருந்தது. ஒருவேளை என்  யூகம்தான்  தவறோ? இந்தப் பெண் நான் கற்பனை செய்கிற காரணத்துக்காக அல்லாமல் வேறு காரியத்துக்காக வந்தவளாக இருக்கலாமோ?

வாசலைத் தாண்டும்போது '' அரவாடா. அன்னா?'' என்று அந்தப் பெண் ரமேசிடம் கேட்பது தெரிந்தது. ரிக்ஷாவைக் கண்டுகொள்ளாமல் நடந்தேன். மெயின் ரோட்டை அடைந்து வழி விசாரித்தேன். காட்டப்பட்ட திசையில் வேகமாக நடந்தேன். பாதி தூரம் போன பின்பு என்னை முந்திக் கொண்டு ரிக்ஷா போனது. என்னைத் தாண்டி சில அடிகள் போனதும் அதன் பின் பக்கச் சதுரத் திரை உயர்ந்தது. ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் எட்டிப் பார்த்தாள்.

'' ஒஸ்தாரா மீரு?'' என்று கேட்டாள். ஒரு நொடி தடுமாறிய பின்பு '' லேது ரா லேது'' என்றேன். திரை மூடியது. ரிக்ஷா வெகுதூரம் நகர்ந்ததும்தான் மூச்சு சீரானது. நடையை மெதுவாக்கினேன். காரணமில்லாமல் எதற்காகப் பயப்பட வேண்டும்? நாமாக விரும்பாவிட்டால் எது நம்மை என்ன செய்ய முடியும்? அப்படியே விரும்பினாலும் தப்பில்லை. இந்த வயசுக்குச் சபலப்படாவிட்டால் எப்படி? எதுவானாலும் வருகிறபோது பார்த்துக் கொள்ளலாம். கேள்விகளும் பதில்களுமாக யோசித்துக் கொண்டே போனதில் தன்னிச்சையாகவே ஜன சந்தடியான சந்திப்புக்கு வந்திருந்தேன். மறுபடியும் விசாரித்து சித்ராலயா வைக் கண்டு பிடித்தேன். அருகிலிருந்த ஓட்டலில் முழுச் சாப்பாட்டையும் கண்ணீர் உகுத்துக் கொண்டே சாப்பிட்டேன்.

படம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் அதன் முழுக் கதையும் புரிந்து விட்டது. தமிழ்க் 'கல்யாண பரி'சின் இந்தி வடிவம்.  ஜெமினி கணேசனுக்குப் பதில் ஜிதேந்திரா. சரோஜாதேவிக்கு ஸ்ரீதேவி. விஜய குமாரிக்கு ஜெயப்ரதா. 'தோஃபா' என்றால்  'பரிசு' .ஆனால் அது கல்யாணப் பரிசாக இருக்கும் என்று யூகிக்காமல் விட்டுவிட்டேன். ஜெயப்ரதா வந்த முதல் காட்சியில் பொறிதட்டியது. லாட்ஜில் நான் பார்த்த பெண் அந்தச் சாயலில்தான் இருந்தாள். ஜெயப்ரதாவின் கண்ணாடிப் பிம்பம்போல. ஜெயப்ரதாவுக்கு இடது நாசிக்குக் கீழே மேலுதட்டில் மச்சம். லாட்ஜில் பார்த்தவளுக்கு வலது நாசிக்குக் கீழே. தொழிலுக்காக செயற்கையாக வைத்த மைப் புள்ளியாகவும் இருக்கலாம். படத்தை விட, சொந்தக் கற்பனை சுவாரசியமாக இருந்தது. சினிமாக்களில் விலை மகளிர் பாத்திரங்களில் வரும்  பெண்களில் சிலர்  நளினமானவர்களாகக் காட்டப்படுவதைப் பார்க்கும்போது பொய்யென்று தோன்றும்.  நடைமுறை யில் பாலியல் தொழில் செய்யும்  பெண்கள் அப்படி இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். அதைப் பொய்யாக்கியவள் அந்தப் பெண்.

விநியோகஸ்தரைப் பார்த்து நினைவூட்டுவதைத் தவிர மறுநாள் முக்கியமான வேலை இல்லை. அதை முடித்து விட்டு ரமேஸ் பரிந்துரைத்த மூன்று கொண்டாக்களைப் பார்க்கப் போனேன். மும்மதக் குன்றுகள். வெங்கடேஸ்வர கொண்டா. கன்னி மேரி தேவாலயம் இருக்கும் ராஸ் கொண்டா, பாபா இஷாக்கின் தர்கா இருக்கும் தர்கா கொண்டா. மூன்றிலும் மாலைவரை சுற்றித் திரிந்ததில் நாள் போயிற்று. திரும்பி வரும்போது மெயின் ரோடு பஸ் ஸ்டாப்பில் அந்தப் பெண்  நிற்பதைப் பார்த்தேன். பிற பெண் முகங்களில் அநேகமும் வாடிப் போயிருக்க அவள் முகம்மட்டும் பளிச்சென்று  தெரிந்தது. பஸ் ஸ்டாப்ப்பில் அவளைக் கடந்து வந்த போது பழக்கப் பட்டவளாகச் சிரித்தாள். அவளுக்கு நேர் முன்னால் நின்ற நொடியில் ''ஒஸ்தாரா மீரு?'' என்றாள். திரும்பிப் பார்க்காமல் வேகவேகமாக நடந்து லாட்ஜை அடைந்தேன்.

ரமேசின் தலைப்பக்கத் சாவிப் பலகையில் இன்னும் இரண்டு பெயர்ச் சீட்டுகள் இருந்தன. சாவியை வாங்கிக் கொண்டு அறைக்குப் போய் குளித்து உடைமாற்றிக் கீழே வந்தேன். தெலுங்கு தொலைக்காட்சியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியை  ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ரமேஸ். என்னைப் பார்த்ததும் தொலைக்காட்சியை ஆஃப் பண்ணினார்.'' இன்னாவ்து ஓணுமா சார்?'' என்று கேட்டார். ஒரே நாளில் நீண்ட காலம் தோழமையாக இருந்த உணர்வைத் தரும் தோற்றமும் பாந்தமும் ரமேசிடமிருந்தது. சுவாரசியமான பேச்சாளி. நீண்ட நேரம் பேசியதில் கிடைத்த சகஜ உணர்வில் அந்தப் பெண்¨ ணப் பற்றி விசாரித்தேன். ரமேஸ் நமட்டு சிரிப்புச் சிரித்தார். ''இன்னா சார், ஒம் மூஞ்சியப் பாத்தா அதுக்கெல்லாம் வலியுற ஆளாத் தெர்லேன்னு அதுங்கையில் காலேலதான் சொல்லிகினுருந்தேன். இப்டி கவுத்திட்டியே. ஆங்... அல்லா ருக்கும்தான் இது இருக்கே. அதென்ன ஊறுகா போட்றதுக்கா'' என்றார்.

பேச்சு அபாய கட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன். இல்லை. அந்த மாதிரி எண்ணமெதுவும் இல்லை. சும்மா தெரிந்து கொள்ளும் குறுகுறுப்புத்தான். சாமி, நீயாவது ஏதாவது சிக்கலில் மாட்டி வைத்து விடாதே என்று ரமேசிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். ''இதிலென்னா சார் இருக்கு. ஓணும்னா அதுங்கையில சொல்லப் போறேன். அதுக்கும் புடிச்சிருந் தா சரிங்கப்போவுது. ஆனா அது மத்த தொழில் பண்றதுங்க மாறியெல்லாம் இல்ல சார். பக்கா டீசெண்ட்டு. நம்ம லாட்ஜு தான் அதோட எடம். ஆனா இதுவரிக்கும் ஒரு கரைச்சல் குடுத்ததில்ல. வர்றப்பல்லாம் மாமூல் வெட்றதுனால போலீசு  வந்து பாத்துட்டுப் போய்டும். அதுக்கா புடிச்சிதின்னா சரி. இல்லன்னா லச்ச ரூவா குடுத்தாலும் ஒத்துக்காது.ஒங்க கம்பெனீலேர்ந்து உனக்கு மிந்தி ஒரு பாய் வருவாரே சார். நல்ல பேரு சார்....'' நான் என்னுடைய பரிசுத்தத்தை நிரூபிப்ப தற்காக அவர் பெயரைச் சொன்னேன். ''ஆமா சார், அதான். அவரு என்கையில சொல்லிப் பாத்தாரு. அது வேணாம் ரமேசுன்னிடுச்சு'' என்று என் கண்களை வேவு பார்த்துக் கொண்டே சொன்னார். நான் தலை குனிந்தேன். அவமானமாக  இருந்தது. ஒரு மூன்றாந்தர விடுதித் தரகர்  மனதைத் துருவிப் பார்க்கிற அளவுக்குக் குன்றிப் போனதைப் பற்றிய  அருவருப்பு வாய்க்குள் ஊறியது. அங்கிருந்து தப்புவதற்காக வெளியே போக நகர்ந்தபோது ''தோ சார், நம்பாளு'' என்று  முகவாய்க் கட்டையை உயர்த்தி வாசலைக் காட்டினார் ரமேஸ். அந்தப் பெண்வந்து கொண்டிருந்தாள்.

உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம் என்று தெலுங்கில் சொன்னார் ரமேஸ். அவள் ''அவுனா சார்?'' என்று என்னைப் பார்த்துச் சிரித்தாள். என் முகம் இறுகியது. எதுவும் சொல்லாமல் வெளியேறினேன். நீண்ட தூரம் நடந்து கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்தேன். கடலின் மீது விழுந்து கொண்டிருந்த கப்பல்களின் வெளிச்சம் செய்யும் ஜால வித்தையில் மனதும் பிரகாசமானது. ஈரக் காற்றில் முகத்தின் இறுக்கம் தளர்ந்தது. கடற்கரையில் கூட்டம் கலைய ஆரம்பித்தபோது நானும் எழுந்தேன். வழியில் இரவுணவை முடித்துத் திரும்பி வந்தபோதும் லாட்ஜ் வரவேற்பறையில் அந்தப் பெண் இருந்தாள். கௌண்டருக்குப் பின்னால்  மானேஜர் இருக்கை காலியாக இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிக்குள் கிருஷ்ணாவும் விஜயநிர்மலாவும் இனிமையான பாட்டுக்கு குரங்குத் தனமாகக் குதித்துக் கொண்டிருந்தார் கள். என்னைப் பார்த்ததும்  புன்னகையுடன் '' போஜனமாயிந்தா சார்?'' என்று விசாரித்தாள். சின்னதாக எழுந்த எரிச்சலை  மறைத்துக் கொண்டு தலையாட்டினேன். '' மதராஸா சார்?'' என்றாள். அதற்கும் தலையாட்டினேன். ரமேசிடம் விசாரித்தீர் களாமே வரவா? என்று தெலுங்கில் கேட்டது புரிந்தும் புரியாத பாவனையில் அ¨றைக்கு விரைந்து கதவை அடைத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லையென்றாலும் விளக்கை அணைத்துப் படுத்துக் கொண்டேன். வெகு தொலைவில் கடல் விடுகிற ஓயாத பெருமூச்சின் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.

கதவு தடதடக்கிற ஓசை கேட்டு திடுக்கிட்டு விழித்தேன். '' லோப்பிலோ எவரு? தலுப்பு தெறவுண்டி'' என்ற முரட்டுக் குரலுக்குப் பணிந்து விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்தேன். இரண்டு போலீஸ்காரர்கள். யார்? எங்கிருந்து எதற்காக வந்திருக்கிறேன்? என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்து ஆராய்ந்தார்கள். விசிட்டிங்க்  கார்டைஎடுத்து நீட்டி விவரங்களைச் சொன்னேன். உள்ளூர் விநியோகஸ்தர் செல்வாக்குள்ள அரசியல் பிரமுகரும் கூட  என்பதால்மேற்கொண்டு பேசாமல் வெளியேறினார்கள். மறுபடியும் விளக்கை அணைத்து விட்டுப் படுத்த போது  இதயம் தாறுமாறாக இடித்துக் கொள்வதைக் கேட்க முடிந்தது. வெளியில் காலடி ஓசைகள் தேய்வது கேட்டது. சற்றுக் கழித்து ரமேசின் குரல் கேட்டது. கொஞ்சம் விட்டு அறைக் கதவு மறுபடியும் தட்டப்பட்டது. ''சார்... சார்'' என்ற ரமேசின் குரல். விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்தேன். ரமேஸ்தான் நின்றிருந்தார். ''சார், ஒரு ஒதவி பண்ணு சார். ஒரு முந்நூறு ருவா குடு சார். இன்னி கலெக்ஷனெ ஓனர் வாங்கினு பூட்டாரு. கல்லாலே துட்டு இல்ல. காலிலே திருப்பிக் குடுத்துட்றேன் சார். அர்ஜண்ட் சார்'' என்றார்.

மண்ணாந்தை மாதிரி விழித்தேன். அறைக்கு வாடகையை விநியோகஸ்தர் தருவதாக ஒப்புக் கொண்டதனால்தான் தங்கவே முடிவு செய்திருந்தேன். கையிலிருக்கிற காசை இவரிடம் கொடுத்து விட்டு எப்படித் திரும்ப வாங்குவது? அரைகுறைப் பழக்கமுள்ள ஆளுக்கு நான் எதற்காக ஒத்தாசை செய்ய வேண்டும்? அட்வான்சில் சரிக்கட்டலாம் என்று வைத்தாலும் இவர் கேட்கும் தொகை நாலு நாள் வாடகையை விட அதிகம். என்னுடைய அரை மாதச் சம்பளம். நம்பு சார், காலேல கரெக்டா குடுத்துர்றேன்'' என்ற ரமேசின் விடாப்பிடியான வேண்டுகோளுக்கு ஏன் பணிந்தேன் என்பது இன்றும் விளங்கவில்லை.

காசை வாங்கிக் கொண்டு படியிறங்கினார் ரமேஸ். தூக்கம் கலைந்த எரிச்சலில் மாடி வராந்தாவில் நின்று ஆரவாரமில்லாத தெருவைப் பார்த்தேன். லாட்ஜ் முனைச் சந்தில் இரண்டு போலீஸ்காரர்களும் அந்தப் பெண்ணும் கொஞ்சம் தள்ளி ரமேசும் நிற்பது தெரிந்தது. மிகவும் சுபாவமான குரலில் அந்தப் பெண் போலீசிடம் பேசிக் கொண்டே கையை நீட்டி எதையோ கொடுப்பதும் தெரிந்தது. என் பணம். பெட்டியைத் தூக்கிக் கொண்டு  கம்பெனி கம்பெனியாக அலைந்து வியர்வை சிந்துவதற்குக் கிடைக்கும் என் ஊதியம் நிகழாத குற்றத்துக்கான நியாயமற்ற அபராதமாகக் கை மாறுவதை வயிற்றெரிச்சலுடன் பார்த்தேன்.

மறுநாள் எங்கும் போவதற்கான உற்சாகமில்லாமல் அறையில் தங்கவும் பிடிக்காமல்  விநியோகஸ்தரின் அலுவலகத்தில்  போய் பகல் முழுவதும் உட்கார்ந்து கொண்டேன். மாலையில் திரும்பி வந்தபோதும் ரமேசின் இருக்கை காலியாகவே இருந்தது. அறைக்குப் போய் கைகால் கழுவித் திரும்பி வந்து முந்தின நாள் போன வழியிலேயே நடந்து கடலைப் பார்த்து நேரம் கடத்தினேன். திரும்ப வந்தபோது ரமேஸ் இருந்தார். '' வா, சார், இன்னிக்கு ஓனரோட கேஸ் சார். அதான் வந்துகினும் போய்க்கினு மாருந்தேன்'' என்றார். நீ என்னவோ செய்து தொலை என்று மனதுக்குள் திட்டிவிட்டு '' என் பணம் ரமேஸ்?'' என்று இழுத்தேன். ''இப்ப கையில இல்ல சார், நாளக்கிக் குடுத்துட்றேன். நீ நாளக்கித்தான காலிபண்ற''  என்றார். திக்கென்றது. என் காசு போனதுதான் என்று தெரிந்து விட்டது. ''இல்ல ரமேஸ், காலேல சீக்கிரம் காலி பண்ணிருவேன். மத்தியானம் வண்டி. எனக்கு என் காசு இப்போ வேணும்?'' என்றேன். ''காலேலதான சார். நீ எந்திரிக்க றதுக்குள்ள கைல குடுத்துர்றேன்.பேஜாராவாம இரு சார்'' என்று சாவதான மாகச் சொன்னார். எனக்குப் பதற்றம் அதிகமா னது. '' அய்ய, இன்னார் சார் ஒன்னிய மாரி கம்பெனி ஆளுக்கு இதெல்லாம் இன்னா துட்டு சார்? அதுக்கோசரம் ஒன் துட்ட தராமேர்ந்துரமாட்டேன். நீ தில்லா இரு சார்'' என்று என்னை விரட்டினார். மாடி வராந்தாவிலேயே நொந்து கொண்டு உலாவினேன். சாலை பரபரப்பாக இயங்குவதையும் அடங்குவதையும் வேடிக்கை பார்த்தேன். வயிறு  நிறைய ஏமாற்றம் இருந்ததால் சாப்பிடவும் போகவில்லை. பின்னிரவில் படுக்கையில் விழுந்து சீக்கிரம் எழுந்தேன். தயாராகி லக்கேஜைச் சுமந்து கொண்டு வரவேற்பறைக்கு வந்தேன். விநியோகஸ்தரின் அலுவலகம் ஒன்பது மணிக்குத்த ¡ன் திறக்கும். இப்போது மணி ஏழு. பரவாயில்லை. இங்கே இல்லாமல் வேறு எங்காவது போயிருக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ரமேஸ் இருந்தார். லெட்ஜரில் கையெழுத்துப் போடச் சொன்னபோது காசைத் திருப்பிக் கொ டுத்து விடுவார் என்று தோன்றியது.'' சார், வைசாக் ஏஜென்சீலதான் இருப்பே, துட்டு வந்ததும் கொணாந்து குட்துட்றேன்'' என்று இடியைப் போட்டார். கெஞ்சிப் பார்த்தேன். மரியாதைக் குறைவாகவும் திட்டிப் பார்த்தேன். எதுவும் அவரிடம் பலிக்கவில்லை. ''சார், ஒன்னிய ஏமாத்தணும்னு இல்ல. தோ, பாரு கல்லால அம்பதும் பத்து அறுவது ரூவாதான் இருக்கு. கொஞ்சம் பொறு சார். நாந்தான் கொணாந்து குடுக்குறேங்கறனே. இல்ல ஒனக்கு நம்பிக்கயில் லேன்னா டிரெயினுக்குப் போறதுக்கு மிந்தி  வந்து வாங்கினு போ'' அவருடைய குளிர் பதில் என்னை அவமானப்படுத்தியது. விநியோ கஸ்தர் அலுவலகத்தில் சொல்லி மிரட்டி வாங்கி விடலாம் என்று திட்ட மிட்டு வேகமாக வெளியேறினேன்.

அங்கங்கே அலைந்து திரிந்து விட்டு சரியாக ஒன்பது மணிக்கு விநியோகஸ் தரின் அலுவலகத்தை அடைந்தென். என்னை சர்தாம் லாட்ஜுக்கு அழைத்துப் போன படுபாவிப் பணியாளரை அழைத்து விவரம் சொன்னேன். அதெல்லாம் வாங்கிடலாம் சார். நம்முடைய பழக்கதி லிருக்கிற லாட்ஜ்தான். ஏமாற்ற மாட்டார்கள். அந்த ஓனரும் நமது முதலாளியும் நண்பர்கள். அதனால் உங்கள் பணம் எங்கேயும் போகாது, நான் உத்தரவாதம் என்றார். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் அவநமபிக்கையாகவும் இருந்தது. எவ்வள்வு ஏமாளியாக இருக்கிறேன் என்ற சுய பரிதாபத்தை விட அது அப்பட்டமாகத் தெரிந்து விட்ட அவமானம் பிடுங்கித் தின்றது. சரி, இவர்கள் பில்லை இன்று அடைக் கிறார்கள். அதில் வரும் பணத்தில் உடனடிச் செலவைப் பார்த்துக் கொள்ளலாம். அந்த முந்நூறு ரூபாயைப் பற்றிக் கவலைப் படாமலிருப்போம் என்று அமைதியானேன். வங்கியில் போய் காசைக் கொண்டு வந்து கொடுத்தார் விநியோகஸ்தர். அவரது ஆட்களுடன் பார்சல் அலுவலகம் போய் சரக்கை எடுத்துக் கொடுத்தேன். மணி பதினொன்று ஆகியிருந்தது. திரும்ப வைசாக் ஏஜென்சிக்கு வந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது பணியாளர் வந்து வெளியே வரச்சொன்னார். வந்தேன். ஏஜென்சி அலுவலகத்துக்கு நாலு கடைகள் தள்ளி அந்தப் பெண் நின்றிருந்தாள். பணியாளருடன் நடந்து  அவளை நெருங்கும்போது உள்ளங்கை வியப்பதையும் கால்கள் தள்ளாடியதையும் ரத்தம் கொந்தளிப்பதையும் உணர முடிந்தது. யாராவது பார்த்து விடப் போகிறார்கள் என்ற தயக்கத்துடன் அவள் அருகில் போய் நின்றோம். களைத்த புன்னகையுடன் ’’சாரு’’ என்றவள் கையிலிருந்த நோட்டுகளைப் பணியாளரிடம் கொடுத்தாள். அவர் வாங்கி என்னிடம் கொடுத்த நோட்டுகளைப் பிச்சைக்கார வேகத்துடன் எண்ணிப் பார்த்தேன். ஆறு ஐம்பது ரூபாய் நோட்டுகள். கணக்குச் சரி. பணியாளரிடம் அவள் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை. நிம்மதியில் காது அடைத்தி ருந்தது. ''ஒஸ்தானு சார்''  என்று படியிறங்கிப் போனள். திரும்ப அலுவலகம் வந்தமர்ந்தேன். கொஞ்ச நேரம் போனது. ஒலித்த தொலைபேசியை எடுத்துப் பேசிய ஏஜென்சி மானேஜர் '' தோ இஸ்தானு'' என்று பதில் சொல்லி விட்டு என்னைப் பார்த்து ''சார் மீக்கு போன்'' என்று நீட்டினார். '' மெட்ராசிலிருந்தா?'' என்று வாங்கினேன். ''லேது சார் லோக்கல் கால்''

விசாகப்பட்டினத்தில் என்னைத் தொலைபேசியில் அழைக்கக் கூடியவர்கள் யாருமில்லை. காதருகே ரிசீவரைக் கொண்டு சென்றேன். ''சார், நான் ரமேஸ் பேசறேன்'' என்றது மறுமுனை.

@

’அந்திமழை’ மாத இதழின் ‘மனக் கணக்கு’ பத்திக் கட்டுரையாக வெளியானது. ஓவியம் - பி ஆர் ராஜன்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக