செவ்வாய், 1 மார்ச், 2016

தன்பினாரின் ‘ நேர நெறிமுறை நிலையம்’














ண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் துருக்கிமொழி எழுத்தாளர் ஹம்தி அஹமத் தன்பினாரின் இரண்டாவது நாவல் ' நேர நெறிமுறை நிலையம்'. இதற்கு முன்பாக தன்பினாரின் 'நிச்சலனம்' நாவலை வெளியிட்டது. காலச் சுவடு பதிப்பகம் தொடந்து துருக்கி மொழியில் எழுதப்பட்ட சிறந்த ஆக்கங்களைத் தமிழுக்குஅறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஓரான் பாமுக்கில் தொடங்கியது இந்த அறிமுகம் . நோபெல் பரிசு பெற்றதன் மூலம் உலக மொழிகளின் விரிவான கவனத்துக்கு வந்தவர் பாமுக். அவருடைய இரண்டு நாவல்களும் – என் பெயர் சிவப்பு, பனி -ஒரு சுயசரிதையும் – இஸ்தான்புல் - தமிழில் காலச்சுவ்டு வாயிலாக வெளிவந்திருக்கின்றன. நவீன துருக்கியின் தந்தை – அட்டாதுர்க் - என்று பாராட்டப்படும் முஸ்தபா கமால் பாஷாவின் மனைவியின் நினைவுக்குறிப்புகள் அடங்கிய நூலும் பாமுக்குப் பின் எழுத வந்த அய்பெர் டுன்ஷ் என்ற பெண் எழுத்தாளரின் சிறு நாவல் – அசிஸ்பே சம்பவமும் - காலச்சுவடு வெளியீடுகளாக வந்திருக் கின்றன. இவற்றில் பாமுக்கின படைப்புகள் தவிர மற்றவை எல்லாம் ஆங்கிலம் தவிர இந்திய மொழி ஒன்றில் வெளிவந்திருப்பது தமிழில் மட்டுமே.


பாமுக்கின் ஆரம்பகால நாவலான 'வெண்ணிறக் கோட்டையும் இங்கே இன்று வெளியிடப்படுகிறது. ஓரான் பாமுக்கைப் பற்றியதல்ல என் பேச்சு. ஆனால் இன்று துருக்கிமொழியின் நவீன முகமும் அந்தப் பண்பாட்டை நினைவு படுத்துபவரும் அவர்தான் என்பதால் அவரைப் பற்றிக் குறிப்பிட நேர்கிறது.

 தன்னுடைய முன்னோடி எழுத்தாளர் என்று ஓரான் பாமுக் மதிக்கும் எழுத்தாளர் தன்பினார். தன்பினாரைப் பற்றி உலகத்துக்குச் சொன்னவரும் ஓரான் பாமுக் தான். இந்த அரங்கில் இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த துருக்கி எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்படுகின்றன என்பது தற்செயலான ஒற்றுமை.

ஹம்தி அஹமத் தன்பினார் அவருடைய நாவலின் களமான இஸ்தான் புல்லில் பிறந்தவர். பதின்மூன்று வயதிலேயே தாயை இழந்தவர். அவருடைய தந்தை நீதிபதியாக இருந்தவர். அதனால் பல இடங்களுக்கும் பணி நிமித்த மாக மாற்றல் பெற்று வந்தவர். அவர் போகும் இடங்களுகெல்லாம் தன்பினாரும் சென்றார். அவர் முதலில் படித்தது கால்நடை மருத்துவம். பிறகு அதைப் பாதியில் விட்டுவிட்டு இலக்கியம் பயின்றார். இலக்கிய ஆசிரியராகவே  கல்லூரிகளிலும் பல்கலைக் கழங்களிலும் பணியாற்றினார். அறுபதாவது வயதில் மாரடைப்பால் காலமானார். இது அவரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு.



தன்பினார் கவிஞர். எழுத்தாளர், அறிஞர். அதையெல்லாம் விட முக்கிய மானது துருக்கியப் பண்பாட்டின் பிரதிநிதியாகவும் விமர்சகராகவும் செயல்பட்டவர்.அவர் எழுதிய இரண்டு நாவல்கள் அதற்கு உதாரணங்கள். நிச்சலனம் என்ற நாவல் தமிழில் வாசிக்கக் கிடைக்கிறது. எனவே அவரது இரண்டாவது நாவலான 'நேர நெறிமுறை நிலையம்' பற்றிப் பேசலாம். இந்த இரண்டு நாவல்களுமே தொடர்கதையாக வெளிவந்தவை. வெளிவந்த காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப் பட்டவை. ஆனால் பின்னர் இந்த நாவல்கள் பேசப்படாமல் போய் விட்டன. துருக்கியில் நிலவிய அரசியல் அதற்குக் காரணம்.


துருக்கியில் நீண்ட காலம் நிலவிய ஆட்சி ஓட்டாமன் சுல்தான்களின் பரம்பரை ஆட்சி. மத அடிப்படையில் நடந்த இந்த ஆட்சிக் காலங்களில் எந்த வலர்ச்சியும் இல்லாமலிருந்த நாட்டைத்தான் ஐரோப்பாவின் நோயாளி என்று வரலாற்றாளர்கள் சொல்லுகிறார்கள். ஒட்டாமன் படையில் ராணுவ அதிகாரி யாக இருந்த முஸ்தபா கமால் பாஷா நடத்திய புரட்சியில் ஒட்டாமன் சாம்ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்டது. முஸ்தபா கமால் கொண்டு வந்த சீர்திருத் தங்கள்தான் இன்றைய துருக்கியை நவீன துருக்கியாக்கியது. இது வரலாறு. அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் எல்லாம் மேற்கத்திய, ஐரோப்பிய நடைமுறைகளைச் சேர்ந்தவை.  
முன்பு குறிப்பிட்ட லதிஃபே ஹனிமின் நினைவுக் குறிப்புகளில் இதைப் பற்றி விரிவாகப் படிக்கலாம்.

மதச் சார்பற்ற துருக்கிக் குடியரசு என்று அறிவித்திருந்தாலும் கமால் பாஷா கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகார ஆட்சியைத்தான் நடத்தினார். பழைமையான எல்லாவற்றையும் சீர்திருத்த முயன்றார். பைசாண்டியம், ஸ்டாம்போல், கான்ஸ்டாண்டிநோபிள் என்றெல்லாம் அழைக்கப்பட்ட நகரத்துக்கு இஸ்தான் புல் என்ற பெயரை வைத்தவர்அவர்தான். துருக்கி மொழியைச் சீர் திருத்தினார். துருக்கியர்களின் உடை, உணவு, பழக்க வழக்கங்கள், கலை, இசை எல்லாம் மாற்றப்பட்டன. காலங்காலமாக மதத்தின் இறுக்கமான பிடிக்குள் வாழ்ந்த மக்கள் இந்தப் புதிய சீர் திருத்தங்களால் குழம்பிப் போனார்கள். பழைசை முற்றிலும் விட முடியவில்லை. புதிய நாகரிகத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. ஒரே தடுமாற்றமாக உணர்ந்தார்கள். இந்தத் தடு மாற்றத் தைத் தான் தன்பினார் தனது நாவல்களில் சித்தரிக்கிறார்.தங்கள் மீது திணிக்கப் பட்ட மேற்கத்தியப் புதுமையை அந்த மக்களால் விலக்கவும் முடியாது; பழமையான நம்பிக்கைகளிலிருந்து விடுபடவும் முடியாது. இந்த இரண்டும் கெட்ட காலத்தைத்தான் தன்பினார் நாவல்களில் சித்திரிக்கிறார். இரண்டு நாவல்களின் தலைப்பும் அதைத்தான் சொல்கின்றன. முதலாவது நாவல் நிச்சலனம். இரண்டாவது 'நேர நெறிமுறை நிலையம்'.இரண்டும் காலத்தைக் குறிக்கும் தலைப்புகள். இந்த இரண்டும் கெட்டான் காலத்தை ஆட்சி அதிகாரம்தான் மக்கள் மேல்  திணிக்கிறது. அந்த அதிகாரத்தைப் பற்றியதுதான் - அதன் மீதான விமர்சனம்தான் அவருடைய நாவல்கள்.


நேர நெறிமுறை நிலையம் நாவலின் கதாநாயகன் ஹயரி இர்டால். நேர நெறிமுறை நிலையத்தின் பணியாளனாக இருந்தவன். அந்தப் பணியில் இருந்த காலத்தைப் பற்றி அந்த நிலையம் இல்லாமல் ஆன பிறகு நினைவு கூர்ந்து ஒரு புத்தகத்தை எழுதுகிறான். அதை அவன் எழுதுவது ஒரு மனநல விடுதியில் இருந்து. அவனுடைய நோக்கம் நேரநெறிமுறை நிலையத்தை உருவாக்கிய அயார்ச்சியின் சாதனைகளைப் பற்றிச் சொல்வதுதான். அந்த வகையில்தான் நாவல் முன்னேறுகிறது. சரி, நேர நெறிமுறை நிலையத்தின் பணிகள் என்ன? நாடு முழுவதும் ஒரே மாதிரியான காலத்தை உருவாக்குவது. ஒரு இடத்தில் பனிரெண்டு மணி என்றால் எல்லா இடத்திலும் பன்னிரண்டாகவே இருக்க வேண்டும். அதை மீறுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாவார்கள். இதை ஒட்டித்தான் கதையின் சம்பவங்கள் நடக்கின்றன.கதையாகச் சொல்லி விளக்க முடியாத கதைதான் நாவலில் இடம் பெறுகிறது.


துருக்கி போன்ற கீழ்த் திசை நாடுகளில் கடிகாரத்துக்கு மேற்கத்திய வாழ்க்கையில் இருப்பதுபோல இன்றியமையாத இடம் இல்லை. அந்த மக்கள் சூரியனின் நகர்வைக் கொண்டு பொழுதையும் இயற்கையின் மாற்றத்தைக் கொண்டு பருவங்களையும்  புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்குக் கடிகாரத்தின் தேவை என்பது ஐந்து வேளை தொழுகைக்கு உரிய பொழுதைத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே. இந்த வாழ்க்கையில் நேரத்தை நெறிமுறைப் படுத்துவது என்பது அபத்தமானது. ஆனால் அரசாங்கம் அதைக் கட்டாயப் படுத்துகிறது. அப்படியானால் மக்களின் செயலை நிர்ணயிப்பது யார்? அவர்கள் செயல்படுகிறவர்களா இல்லை செயல்படுத்தப் படுகிறவர்களா? இந்தக் கேள்வியைத்தான் நாவலில் தன்பினார் முன்வைக்கிறார். கதை சொல்லுகிற ஹயரி அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறவன். அவனுக்கு மேற்கத்தியப் பழக்கங்கள் விருப்பமானவை. 'மேற்கத்திய உலகத்தின் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாமல் கடந்த காலத்துடனான நமது தொடர்புகளைப் பேணியபடியே நமக்கான புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியம்' என்று நினைக்கிறான். ஆனால் பழமையான கலாச்சாரத்தில் வேரூன்றியிருக்கும் பெரும்பான்மையான சமூகம் இதை அபத்தமானதாக நினைக்கிறது. இந்த அபத்தம்தான் நாவலின் கதை.



பிழையான நேரத்தைக் காட்டும் கைக் கடிகாரங்களையும் கடிகாரங்களை யும் வைத்திருப்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தச் சம்பவங்கள் நாவலில் மிகக் கூர்மையான கேலியுடன் சொல்லப்படுகின்றன. அரசாங்கம் நிர்ணயம் செய்து வைத்திருக்கும் நேரத்துக்கு மாறாக, அரசாங்கக் கடிகாரம் பன்னிரண்டு மணியைக் காட்டும் போது யாருடைய கடிகாரமாவது 11. 55 என்று காட்டுவதோ அல்லது ஏதாவது பொது மணிக் கூண்டில் 12.05 என்று இருப்பதோ அபராதத்துக்குரிய குற்றம். இது மக்களுக்கு முதலில் தொந்தரவாக இருக்கிறது. பிறகு வேடிக்கையாக மாறி விடுகிறது. இந்த அபத்தத்தை அவர்கள் கொண்டாவே ஆரம்பித்து விடுகிறார்கள். உற்சாகமாக அபராதம் செலுத்தத் தயாராகிறார்கள். அந்த அளவுக்கு என்றால் அதிகமாகப் பிழை செய்தவர்களுக்கு அபராதத் தொகையில் கணிசமான தள்ளுபடி அறிவிக்கும் அளவுக்கு. இது தங்களைக் கேலிப் பொருளாக்கும் அரசாங்கத்தை மக்கள் பகடி செய்யும் செயலாகச் சொல்லலாம். இந்தப் பகடிதான் நாவலின் மையமான அம்சம். மூன்று வகையான கடிகாரங்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஒன்று - தாத்தாவின் கடிகாரம். அது பண்பாட்டின் சின்னம். இரண்டாவது கடிகாரம் படுக்கையறைச் சுவரில் மாட்டப்பட்டிருப்பது. அதற்கு மதச் சார்பு கிடையாது. மூன்றாவது கடிகாரம் அப்பாவின் பாக்கெட் கடிகாரம். அதில் ஒரு முள் எப்போதும் மெக்கா இருக்கும் திசையை நோக்கியே இருக்கும். மதச் சார்பற்ற அரசும் மதவாதமும் ஒரே தளத்தில் கேலிக்கு உரியவை ஆகின்றன.


இந்தக் கேலியில் தன்பினாரின் கடுமையான விமர்சனம் மறைந்திருக் கிறது. 1926 ஆம் ஆண்டு அட்டாதுர்க் கமால் பாஷா சட்டத்தின் மூலம் ஐரோப்பிய கிரகோரியன் காலண்டரை துருக்கியில் அமல்படுத்துகிறார். ஒரே காலத்தைக் காட்டும் மணிக் கூண்டுகளையும் துருக்கி முழுவதும் கட்டச் செய்கிறார். அதுவரை புழக்கத்திலிருந்த உள்ளூர் காலக் கணிப்பு தலைகீழாகிறது. அதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்வும் சமூக வாழ்க்கை யும் புரண்டுபோகின்றன. மக்களை செயல்படுபவர்களாக அல்லாமல் செயல்படுத்தப்படுபவர்களாக மாற்றும் அதிகாரத்தை எதிர்க்கும், விமர்சிக்கும் குரலாகவே தன்பினார் நாவலில் தெரிகிறார்.


ஹயரி எழுதும் புத்தகத்தில் இந்தக் காலச் சீரமைப்பு விரிவாக இடம் பெறுகிறது. அதன் மனவிளைவுகளைச் சித்தரிப்பதற்கானவர்களாகவே பிற பாத்திரங்களும் சம்பவங்களும் கையாளப்படுகின்றன. ஹயரி நேர நெறிமுறை நிலையத்தைப் பற்றி உடன்பாடான தொனியில் எழுதினாலும் அது எதிர்மறையாக நம்மால் வாசிக்கப்படுகிறது. இந்தக் காலக் கட்டுப்பாடு நடைமுறை சாத்தியமல்ல என்று தெரிந்து கொண்ட பின் நேர நெறிமுறை நிலையத்தை உருவாக்கிய ஹயார்ச்சி அதைக் கலைத்து விடுகிற இடத்தில் நாவல் முடிவடைகிறது. கிட்டத்தட்ட ஐநூறு பக்கமுள்ள நாவலின் கதையைப் பேசுவது சுலபமல்ல. தவிர இது சம்பவங்கள அடுக்கிச் செல்லும் கதையோட்டம் கொண்ட நாவலும் அல்ல. மிகவும் அரூபமான இரண்டு விஷயங்களை - காலத்தையும் அதிகாரத்தையும் பற்றிப் பேசுகிற நாவல் இது. இதன் மையமான பிரச்சனையைப் பற்றி மட்டுமே பேசியிருக்கிறேன்.


இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர் பங்கஜ் மிஸ்ரா மிக விரிவான முன்னுரையை எழுதி யிருக்கிறார். காசி நகரத்தைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய 'தி ரொமான்டிக்ஸ்' நாவல் வாசகனாக என்னைக் கவந்த நாவல். அதை விடவும் 'நேரநெறிமுறை நிலைய'த்துக்கு வரலாற்றுப் பின்புலத்தில் எழுதியிருக்கும்  முன்னுரை என்னைக் கவர்ந்தது.




தன்பினாரின் நாவலைத் தமிழாக்கம் செய்திருப்பவர் எத்திராஜ் அகிலன். என்னுடைய முப்பது ஆண்டுக்கால  நண்பர். கவிஞர் பிரம்மராஜன் ஊட்டியில் இருந்த காலத்தில் அறிமுகமானவர். மீட்சி இதழும் மீட்சி பதிப்பகமும் செயல்பட்ட அந்தப் பொன்னான நாட்களில் அறிமுகமானவர். ஆங்கிலத் திலிருந்து உருப்படியான சில மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். அந்தப் பொற்காலத்துக்குப் பின்னர் நெடுநாட்கள் தொடர்பில் இல்லை. நண்பர் சிவகுமாரின் மகள் திருமணத்தின்போது மீண்டும் சந்தித்துக் கொண்டோம். அன்றைக்குப் பார்த்த அகிலன் அதே சிரிப்புடனும் அதே அன்புடனும் பழகக் கிடைத்தார். பணி ஓய்வு பெற்று விட்டதாகச் சொன்னார். வசமாக ஒரு ஆள் அகப்பட்டுக் கொண்டார் என்ற மகிழ்ச்சியில் சில மொழிபெயர்ப்புகளை அவரிடம் ஒப்படைத்தோம். அவை தந்த நம்பிக்கைதான் தன்பினாரின் இந்த நாவலை தமிழில் கொண்டுவரத் தூண்டுதலாக இருந்தது. இந்த நாவலை அவர் தலையில் கட்டிய பழியில் அல்லது இந்தக் கைங்கரியத்தைச் செய்த புண்ணியத்தில் எனக்கும் பங்கிருப்பதை இந்தப் புத்தகத்தைக் கையால் தொடும் இந்த நொடியில் மிக மகிழ்ச்சியுடன் உணர்கிறேன்.

ஒரு வாசகனாக தன்பினாரின் இந்த நாவல் எனக்கு இரண்டு ஆச்சரியங் களைக் கொடுத்தது. இந்த நாவல் 1962 இல் எழுதப்பட்டது. மிக மிகத் தாமதமாக 2013இல்தான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இன்றைய நவீன நாவல்களின் போக்குக்குச் சவால் விடும் வகையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அதி நவீனமாக ஒரு படைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது என்பது முதலாவது ஆச்சரியம். இந்த நாவலை வாசிக்கும் போது நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தின் அபத்தங்களை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது என்பதும் நமது சமகால அரசியல் நிகழ்வு களுடன் நாவலின் பல சம்பவங்கள் பொருந்துகின்றன என்பதும்  இரண்டாவது ஆச்சரியம்.

நாவலில் இடம் பெறும் ஒரு வாசகம் - 'சுதந்திர மோகம் என்பது ஒரு வறட்டு ஜம்பம்' என்பது. அது அப்படித்தானா என்பதைத்தான் நாவல் விவாதிக்கிறது. நாமும் அதை விவாதிக்க வேண்டிய காலத்தில்தானே வாழ்கிறோம்?

@
 மதுரையில்  27 08 2015 அன்று  நடைபெற்ற காலச்சுவடு நூல் வெளியீட்டரங்கில் நிகழ்த்திய உரை. 



























1 கருத்து: