புதன், 20 ஏப்ரல், 2016

இமையத்தின் ' எங் கதெ'




மையத்தின் 'எங் கதெ' நாவல் விமர்சன அரங்கில் கலந்து கொள்வது  மகிழ்ச்சியளிக்கிறது. வாசகனாகவும் இலக்கிய ஆர்வலனாகவும் இந்த மகிழ்ச்சிக்குப்  பல காரணங்கள் இருக்கின்றன.

அண்மையில் வெளிவந்த நூல்களில் மிக அதிகமாகப் படிக்கப்பட்டதும் பேசப்பட்டதும் இந்த நாவல்தான் என்று நினைக்கிறேன். உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் இந்த நாவல் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகம் வெளிவந்து குறுகிய காலத்துக்குள் பரவலாக விவாதிக்கப்  பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. சரியாகச் சொன்னால் இமையத்தின் படைப்புகளில் பரவலான கவனத்துக்கு வந்திருப்பதும் இந்த நாவல் தான். அவருடைய படைப்பு ஒன்றுக்கு தனியாக கூட்டம் நடப்பதும் இதுதான் முதல் முறை.
இத்தனைக்கும்  இமையம் இருபது வருடங்களுக்கு மேலாக எழுதி வருபவர். மூன்று நாவல்களையும் நான்கு தொகுப்புகளாக வெளி வந்திருக்கும் சுமார் ஐம்பது சிறுகதைகளையும்  எழுதியிருக்கிறார். இவையெல்லாம் முக்கியமான படைப்புகள் என்ற மதிப்பைப் பெற்றவை; எழுதிய எழுத்தாளர் இலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்தவர் என்ற  கணிப்புக்கும் ஆளானவர்.ஆனால் இந்த மதிப்பும் கணிப்பும் இமையத்தின் பங்களிப்புக்குக் குறைவான அங்கீகாரம் என்றே  நினைக்கிறேன். அதை ஒரு குறையாகவே எடுத்துக் கொள்கிறேன்.

புதிய நாவல் இந்தக் குறையைப் போக்கியிருக்கிறது. வாசகர்கள் பலரும் பேசும்  நாவலாகவும் இலக்கிய வட்டங்களில் கொஞ்சம் பொறாமையுடன் விவாதிக்கப் படும் படைப்பாகவும் 'எங் கதெ' அமைந்திருக்கிறது. அதுவும் மகிழ்ச்சியளிப்பது. எனக்கும் இமையம் மிக முக்கியமான எழுத்தாளர் என்ற எண்ணமே இருந்தது.  இமையத்தின் எல்லா நாவல்களையும் பெரும் பான்மை யான கதைகளையும் வாசித்திருந்தும் அவருடைய பங்களிப்புத் தவிர்க்கக் கூடாதது என்ற கருத்தெல்லாம்  இருக்கவில்லை. 'நம் மண்ணைக் கண் திறந்து பார்க்க அன்போடு கேட்டுக் கொள்ளும் நாவல் இது' என்ற சுந்தர ராமசாமியின் வற்புறுத்தல் இல்லாமலிருந்தால் 'கோவேறு கழுதைகள்' வாசிப்பு, கொஞ்சம் பிந்திப் போயிருக்கலாம். அதையொட்டி  இமையம் என்ற படைப்பாளியின் உலகத்துடன் கொள்ளும் உறவும் தாமதமாகியிருக்கலாம்.

நல்லவேளை அப்படியெல்லாம் நிகழவில்லை. இமையத்தின் அநேகமாக எல்லாப் படைப்புகளையும் அவை வெளியான சுருக்கிலேயே வாசித்தும்  இருக்கிறேன். இருந்தும் அவரது பங்களிப்புப் பற்றி ஒரு முழுமையான கருத்துக்கு வரமுடியாமலேயே இருந்தது. இவர் மிக முக்கியமான எழுத்தாளர்  தான்; ஆனால் அந்த முக்கியத்துவம் எதனால் என்று திட்டவட்டமாகச் சொல்லத் தெரியாத ஒரு மனமூட்டம் இருந்தது. அந்த மூட்டத்தை நண்பர் அரவிந்தன் கலைத்தார். இமையத்தின் புதிய சிறுகதைத் தொகுதியான ' சாவு சோறு' பற்றி எழுதும்படி அவர் கேட்டுக் கொண்டதுதான் ஒரு தெளிவு நிலையைக் கொடுத்தது. இமையம் ஒரு  எதார்த்தவாத எழுத்தாளர். ஆனால் எதார்த்தமான நிகழ்வையொட்டி தனது விமர்சனமாகவோ குறுக்கீடாகவோ படைப்பை உருவாக்குவதில்லை. தனக்கு வாய்த்திருக்கும் மொழி மூலம் அந்த எதார்த்தம்  வாசகனின் மனதில் நிகழ்வதாகவே காட்டுகிறார்.  அவரது படைப்புகளின் ஆதாரமான இயல்பு இது. சொல்லி  முடிந்த கதையை அல்ல; நாம் வாசிக்கத் தொடங்கியதும் நிகழத் தொடங்குகிற கதையையே  முன் வைக்கிறார். அவரது சிறுகதைகளை வாசித்தபோது ஏற்பட்ட  இந்தத் தெளிவு மகிழ்ச்சியை அளித்தது. இந்தத் தெளிவான மனநிலையில்தான் 'எங் கதெ' வாசிக்கக் கிடைத்தது. அந்த வாசிப்பு மகிழ்ச்சியை இரு மடங்காக்கியது. மூட்டம் விலகிய மனதுடன் ஒரு படைப்பாளியைப் புரிந்து கொண்ட மகிழ்ச்சி அது.

இரண்டு அம்சங்கள் எங் கதெ’ -  நாவலை வாசிப்புக்கு நெருக்கமானதாக ஆக்கியிருக்கின்றன.

ஒன்று: நாவலில் கையாளப்பட்டிருக்கும் கதை மொழி. கிட்டத்தட்ட நூறு பக்கங்களைக் கொண்ட  புத்தகத்தை எடுத்தால் வாசித்து முடிக்காமல் மூட முடியாது. அந்த அளவுக்கு இயல்பான மொழி, சரளமான போக்கு, ஓட்டமான நடை.  இதை மிக இயல்பாக நாவலில் இமையம் கையாண்டிருக்கிறார்.

இரண்டாவது அம்சம்: இந்த நாவல் வாசிக்கிற நபரிடம் ஏற்படுத்துகிற மன நெருக்கம்.  நாவலை  வாசிக்கிற யாரும் இதன் பாத்திரங்களாகத் தங்களைக் கற்பனை செய்து கொள்வதையும், அந்தப் பாத்திரங்களின் இடத்தில் தங்களை வைத்துப் பார்ப்பதையும்  தவிர்க்க முடியாது என்று எண்ணுகிறேன். இது இமையத்தின் பிற படைப்புகளில் இதுவரை பார்க்க முடியாத இயல்பு. கோவேறு கழுதைகளை வாசிக்கும் போது  ஆரோக்கியத்தையும் ஆறுமுகம் வாசிக்கும்போது ஆறுமுகத்தையும் செடல் வாசிப்பில் செடலையும் பாத்திரங்களாகவே இனங்காணுகிறார்கள். அவர்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆரோக்கியமாகவோ ஆறுமுகமாகவோ செடலாகவோ தங்களைக் கற்பனை செய்து கொள்வதில்லை. அல்லது அப்படிக்  கற்பனை செய்து கொள்ளும் அளவுக்கு ஆசிரியரும் கதையில் நெருக்கத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் 'எங் கதெ' வாசிக்கும் ஒவ்வொருவரையும் விநாயகமாகவோ கமலாகவோ கற்பனை செய்து பார்த்துக் கொள்ளச் செய்கிறது. இந்த நாவலின் பலம் இதுதான் என்று நினைக்கிறேன். முன் தீர்மானம் இல்லாமல்  நாவலை வாசிக்கிற யாரும் இதில் தங்களைப் பார்த்து விட முடியும் . இந்த ஒருமை தான் நாவலை உத்வேகத்துடன் பாராட்டவும் தீவிரமாக எதிர்க்கவும் காரணங்கள்.

'எங் கதெ'யில் சொல்லப்படும் கதை புதியது அல்ல. காலங்காலமாகச் சொல்லப்படும் ஆண் - பெண் உறவின் சிக்கல்தான் இதன் கதையோட்டம்.. 'எங் கதெ' ஆணின் வாய் மொழியாகக்கதையைச்  சொல்கிறது. விநாயகம் அடுக்குவது கமலாவைப் பர்றிய குற்றச் சாட்டுகளைத்தான். ஆனால் அதன் வழியாகவே நாம் விநாயகத்தின் பலவீனங்களை கயமையை சுயநலத்தை, ஆளுமைக் குறைவைப்  புரிந்து கொள்கிறோம். அவற்றுக்கு எதிர்நிலையாக கமலாவின் திடத்தை, சாதுர்யத்தைஆளுமையை விளங்கிக் கொள்கிறோம். இமையத்தின் எங் கதெயை புதிய படைப்பாக மாற்றுவது இந்த தள மாற்றம்தான். இதுதான் இந்த நாவலைப் புதுமையான ஒன்றாக நிறுவுகிறது.

'எங் கதெ' என்று விநாயகம் சொல்வது உண்மையில் கமலாவின் கதையை யும்தான். அவளது துயரங்களையும்தான். விநாயகத் துக்கு நாவலின் உச்சகட்டத்தில்தான் தான் கமலா மீது கருணை பிறக்கிறது; ஆனால் வாசிப்பவனுக்கு அதற்கு முன்பே அவள் மீது பரிவும் இரக்கமும் தோன்றி விடுகிறது. அவளுடைய துரோகம் என்று விநாயகம் குறிப்பிடும் ஒவ்வொரு செயலும் அவள் அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? என்ற பச்சாத்தாபமாக மாறிவிடுகிறது.

விநாயகம் தன்னுடைய பத்து வருடக் கதையைச் சொல்லுவதுதான் நாவலின் கதையோட்டம். முப்பத்து மூன்று வயதில் கமலாவைக் காதலிக்கத் தொடங்கி நாற்பத்தி மூன்றாம் வயதில் அவளைக் கொலை செய்ய ஆவேசக் கொள்வது தான் கதை. பத்து வருசத்துக் கண்ணீர். பத்து வருசத்து ரத்தம் அவன் கதை. தன்னுடைய  வாழ்க்கையே ஒரு பெண்ணால் நாசமாகிப் போச்சு என்ற புலம்பலில், இனி மீளவே முடியாத சீரழிவில் அகப்பட்டுப் போச்சு என்ற கழிவிரக்கத்தின் உச்சத்தில் அவன் செய்யத் தீர்மானிக்கும் கொலையைச் செய்ய விடாமல் அவனைப் பின் வாங்கச் செய்வது அந்தப் பத்து வருடத்துக் காதல் அல்லது காமம் அல்லது  உறவு.  அந்தப் பின் வாங்கும் செய்கை அவன் அந்த உறவுக்குச் செய்யும் அதிகபட்ச மரியாதை என்றுதான் தோன்றுகிறது.

ஒருவகையில் நாம் எதிர்கொள்ளும் நடைமுறையின் திருப்பிப் போட்ட மனநிலையை நாவல் சொல்லுகிறது. ஆண் பெண் உறவை அல்லது  காதலை ஆண் பார்ப்பதற்கும் பெண் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பெண்ணைப் பொறுத்தவரை காதல் அவளது வாழ்க்கை. ஆனால் ஆணுக்கு அது வாழ்க்கையின் ஒரு பருவம். இந்தப் பொது நிலையை 'இமையம் தலைகீழாக மாற்றுகிறார் இந்த நாவலில். கமலாவுக்கு விநாயகத்தின் மீதான காதல் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்.அவனுடன் காதலில் இருக்கும்போதே அவளால் தன்னை விலக்கி நிறுத்தி, தன்னுடைய இருப்புக்கானகாரியங்களைச் செய்து கொள்ள முடிகிறது. இரட்டைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறாள். தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்கிறாள். வசதிகளை  உருவாக்கிக் கொள்கிறாள்.தன்னுடைய உயர்வுக்கு உதவக் கூடும் என்றால் சி இ ஓவுடன் உறவு வைத்துக் கொள்வதிலும் நியாயம் காண்கிறாள். இந்த நியாயங்கள்தான், விலக்குகளைப் பொருட்படுத்தாமல் அவள் மேற்கொள்ளும்  சுதந்திரம்தான் விநாயகத்தைப்  புலம்ப வைக்கிறது. தன்னை ஏமாற்றி விட்டாள் என்று பழி சொல்லத் தூண்டுகிறது. அவளைக் கொல்லும் மூர்க்கத் தனத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதனாகஅவன் வேறு எதுவுமில்லை. கமலாவின்மேல் வேட்கை கொண்டவன் என்பதைத் தவிர. வீட்டுக்கு உதவு கிறவனாக இல்லை. அம்மாவின் கையை நம்பியே  செலவு செய்கிறான். தங்கைகளுக்கும் கேலிப் பாத்திரமாகிறான். நண்பர்கள் மத்தியில் பரிகசிக்கப் படுகிறான். வெறும் காதலானாக மட்டுமே இருக்கிறான். வெறும்  காமுகனாக மட்டுமே இருக்கிறான். காதல் மட்டுமே அவனுடைய வாழ்க்கையாக இருக்கிறது. அவனிடமிருக்கும் காதலை அல்லது வேட்கை யைக் கழித்தால்  அவன் வெறும் சூனியம். பத்துவருடக் காதலின் இறுதியில் அவன் அடைவது எதுவுமே இல்லை. 'இங்கிருந்து ஊரு எம்பது தொண்ணூறு மைலு இருக்கும். நடந்தே போவணும்னு தோணிச்சு. முன்னால் இருட்டுக் கொட்டிக் கிடந்துச்சு' என்று முடியும் வரிகள் அதைத்தான் அழுத்தமாகச் சொல்லுகின்றன.


கமலா மீது விநாயகத்துக்கு ஏற்படும் ஈர்ப்பு பொதுவான நடைமுறையை மீறியது என்று தோன்றுகிறது. விதவை, இரண்டு சின்னக் குழந்தைகளின் தாய். அந்நிய  ஊரில் வந்து குடியேறியவள். விநாயகத்தின் வீட்டுப் பழக்கங்களுக்கு அந்நியமானவள். இத்தனை மீறல்களைத் தாண்டித்தான் அந்த ஈர்ப்பு உருவாகிறது. அதுவும் ஆபத்தான ஈர்ப்பு . அதை முதலிலேயே அவன் உணர்ந்து கொள்கிறான். அவளுடைய முதல் வருகையை விநாயகம் சொல்லும் வார்த்தைகளிலேயே இந்த உறவின் குணம் தெரிந்து விடுகிறது. 'நல்ல பாம்பு வர்ற மாரி சரசரன்னு வந்தா'. ஆபத்துடன் மனிதன் கொள்ளும் விசித்திர உணர்வு, விநோதமான சாகசம்தான் தன்னுடைய  காதல் என்று அவனுக்குப் புரிகிறது. அதுவே அவனைத் துன்புறுத்துகிறது. பிறர் பார்வை யிலிருந்து ஒளிந்து கொள்ளச் செய்கிறது. முப்பது மூன்று வயதான ஒரு  ஆணாக அவனால் இந்த உறவை வெளிப்படையான ஒன்றாக ஒருபோதும் முன்வைக்க முடிவதேயில்லை. 'நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாச் சேச்ந்து ஒரு ஊருக்குப் போனதில்ல. கோயில் குளம் போனதில்ல.ஒரு சினிமாவுக்குக் கூடப் போனதில்லே.' என்கிறான். 'புள்ளைங்கள உட்டுட்டு எங்க போறது?' என்று அதற்குச்  சமாதானமும் சொல்லிக் கொள்கிறான். ஆனால் கமலாவுக்கு இந்த மனத் தடைகள் அதிகமில்லை. தனது குழந்தைகள் இருக்கும்போதே அவனை வீட்டில் அனுமதிக்க முடிகிறது. ' பக்கத்து அறையில வயசுக்கு வந்த ரெண்டு படுத்திருக்கு. நான் அவங்க அப்பனில்ல. அவங்களுக்குச் சம்பந்த்மில்லாத ஒரு ஆளு அவங்க அம்மாகூடப் படுத்திருக்கான் அதெ அந்தப் புள்ளைங்க தாங்கலெ' என்று விநாயகமே சொல்லும் இடத்தில் வெளிப்படுவது கமலாவின் வெளிப்படையான இயல்புதான்.

'எங் கதெ' யை சமகாலப் பொருத்தப்பாடு கொண்டதாகவும் காலத்தை மிஞ்சிய நிரந்தரப் பிரச்சனையைப் பேசுகிற படைப்பாகவும் ஆக்குகிற ஒரு இயல்பு நாவலில் இருக்கிறது. அது ஆண் - பெண் உறவின் அடிப்படை இயல்பைச் சொல்கிறது. சமநிலை, பரஸ்பரத் தேவை, சக வாழ்வு என்றெல்லா நற்குணங்களைச்  சொல்லிப் பேணினாலும் இந்த உறவில் கண்ணுக்குப் புலப்படாத , முடிவற்ற போட்டி நிலவுகிறது. யாரை யார் வென்றெடுப்பது என்ற போட்டி. இந்தப் போட்டிதான் காலங்காலமாக இரு பாலைச் சேர்ந்தவர் களை பரஸ்பரம் வசீகரிக்கிறது. ஒருவரை அதிகாரம் செய்து தனக்குக் கீழ்ப் படிதலுள்ளவனாக/ உள்ளவளாக மாற்றத் தொடர்ந்து முயற்சி செய்கிறது. இந்த நாவலில் உயிர்ப்பான தன்மை இந்த முடிவற்ற போட்டியை நுட்பமாகச் சித்தரிப்பதில் இருக்கிறது. கமலா மீது விநாயகம்  சுமத்தும் குற்றச் சாட்டுகள் இந்தப் போட்டியின் விளைவுதான். தனக்கு மட்டுமே உரியவளாக இருக்க வற்புறுத்தும் ஆண்நிலையை பெண் மூர்க்கமான மௌனத்தால் எதிர்க்கிறாள். கமலாவை முள் முனையில் நிறுத்தும் விநாயகத்தின் எல்லாப் புகார் களையும் மறுக்கும் நியாயங்கள் அவளிடம் இருக்கின்றன. விநாயகம் வாளை வீசினால் கமலா கேடயத்தால் அதைத் தடுத்து விடுகிறாள். அந்தத் தற்காப்பை விநாயகத்தால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனாலேயே  அவளது செயல்களைத் துரோகங்களாகப் பார்க்கிறான்.

கமலாவைப் பொறுத்த வரை அவளுடைய செயல்கள் நியாயமானவை. எனவே இந்த உறவில் அவள் எந்த  விதமான குற்ற உணர்வுக்கும் உள்ளாவதில்லை. உண்மையில் கமலாவுக்கு துணை விநாயகம் அல்ல; விநாயகத்துக்குத்தான் கமலா தேவையாக இருக்கிறாள். விநாயகம் இல்லாமலும் கமலாவின் வாழ்க்கை சாத்தியம். கமலா இல்லாமல் விநாயகத்துக்கு வாழ்க்கையே இல்லை. இதை நாவலில் நுட்பமாக எல்லா இடத்திலும் வெளிப்படையாகப் பல சந்தர்ப்பங்க ளிலும் பார்க்கலாம். விநாயகத்தால் கமலாவுக்குப் பொருள் சார்ந்து உதவ முடியாது. அவளுடன் பகிரங்கமாக நடமாட  முடியாது. அவளுக்குச் சிக்கல் வரும்போது துணை நிற்க முடியாது. சி இ ஓ வின் மனைவியும் மக்களும் அவளை அவமதிக்கும் கட்டத்தில் கூட விநாயகம் ஒரு பொய்யான உறவைச் சொல்லித்தான் அந்தச் சூழலில் குறுக்கிடுகிறான். இப்படியான ஒரு உதவாக் கரையுடன் கமலா கொள்ளும் உறவு வெறும் உடல் சார்ந்ததுதானா? ஆமாம். அதன் மூலம் அவள் தனது அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்கிறாள். அந்த அதிகாரத்தைப் பொருளாதார அதிகாரமாகவும், பாலியல் அதிகாரமாகவும், சாதி சார்ந்த அதிகாரமாகவும் கூட விரிவாக்கிக் கொள்கிறாள். இந்த மையம்தான் நாவலை சம காலத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. விநாயகம் சாகசக் கதாநாயகன் அல்ல; கமலாவும் தியாக தேவதை அல்ல. நாம் பார்க்கும் எதார்த்தமான மனிதர்கள். ஒருவேளை நாம்தான் அவர்கள். இந்த ஒற்றுமை நாவலை நிகழ்காலப் பொருத்தம் கொண்டதாக ஆக்குகிறது.

ஓர் ஆணின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் கதை இது. விநாயகத்தின் பார்வையிலும் செயல்களிலும் கருத்துகளிலுமாகவே கதை நிகழ்கிறது. அவன் மூலமாகவே நாம் கமலாவின் உருவத்தையும் செயலையும் இயல்பையும் புரிந்து கொள்கிறோம். நாவலில் கமலா பேசும் இடங்கள் குறைவு. எனினும் அவளுடைய  மௌனங்கள் அவள் பேசியிருக்கக் கூடிய வார்த்தைகளை விட உரக்க ஒலிக்கின்றன. ஒரு படைப்பாளியாக இமையம் தன்னை வலுவாக வெளிப்படுத்தும் தருணம் இது என்று கருதுகிறேன். நாவலை இரண்டாம் முறையாக வாசித்தபோது ஒரு உத்தியைச் செய்து பார்த்தேன். விநாயகத்தின் கோணத்திலிருந்து விலகி கமலாவின் சார்பாக இந்த நாவலை வாசித்தேன். மனிதர்கள் எவ்வளவு அற்பமானவர்கள் என்று புரிந்தது. குறிப்பாக ஆண்கள்.

இதுவரையான தனது படைப்புகளிலிருந்து இமையம் இந்த நாவலில் வேறு பட்டுத் தெரிகிறார். இமையம் தான் இதை எழுதினாரா என்று சந்தேகப்படும் அளவுக்கான வேறுபாடு. காரணம் அவரது படைப்புகள் பொதுவாக நடை முறை சார்ந்தவை. எதார்த்தமான சித்தரிப்புகளைக் கொண்டவை. புற உலகச் செயல்பாடுகள் இடம் பெறும் அளவுக்கு உளவியல் சார்ந்த சிக்கல்கள் அவற்றில் முக்கியமானவையாக இருந்ததில்லை. அவரது கதை சொல்லும் முறை பெரும்பாலும் தற்சார்பற்றது. வலிந்து உரக்கப் பேசாதவை. சமூகம் சார்ந்த பிரச்சனைகளைக் கூட ஆசிரியர் கூற்றாக இல்லாமல் பாத்திர உரையாடல்களாகவே முன்வைப்பது அவரது  இயல்பு. 'மணலூரின் கதை' போன்ற சில கதைகளைத்  தவிர்த்தால் அதிகம் அரட்டை அடிக்காதவை அவரது கதைகள். இந்தப் பொது இயல்புகள் எல்லாவற்றையும்  இந்த நாவல் மீறியிருக்கிறது. மிக இயல்பான மொழியில் மிகச் சிக்கலான ஒரு படைப்பை முன்வைத்திருக்கிறார். அவர் கவிதைகள் எழுதியிருக்கிறாரா என்று தெரிய வில்லை. இந்த நாவலில் கவிதையை நெருங்கும் தீவிரமான மொழியைப் பார்க்க முடிகிறது. கவித்துவமில்லாத வார்த்தைகள் மூலம் கவிதையின் செறிவை எட்டுகிற ஒரு மொழி. அது இந்தக் கதையை இன்னும் ஆவேசமானதாக ஆக்கியிருக்கிறது.

மிக அதிகமான உணர்வுத் தளங்களும் , மிக அதிகமான உட்பிரதிகளும் கொண்ட நாவலாக இதைச் சொல்ல விரும்புகிறேன். இதை இமையத்தின் மிகச் சிறந்த படைப்பு என்று சொல்வேனா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய உண்மையான படைப்பு என்று தயக்கமில்லாமல் சொல்ல முடியும்.

( சென்னையில்  4 ஆகஸ்ட் 2015 அன்று நடைபெற்ற 'எங் கதெ' நாவல் விமர்சன அரங்கில் ஆற்றிய உரை )
.











அறிதலின் தீ













                                   கவிஞர்கள் அ.ரோஸ்லின், லாவண்யா சுந்தரராஜன் ஆகியோருடன்




ண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

லாவண்யா சுந்தரராஜனின் 'அறிதலின் தீ' கவிதைத் தொகுப்பைப் பெற்றுக் கொண்டு பேசும் வாய்ப்பை அளித்த கவிஞருக்கும் புனைவு அமைப்பின் சர்வமுமான நண்பர் செந்திக்கும் முதலில்  எனது நன்றிகள். லாவண்யாவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. முதல் தொகுப்பு 'நீர்க்கோல வாழ்வை நச்சி'  2010 இலும் இரண்டாவதுதொகுப்பு 'இரவைப் பருகும் பறவை' 2011 இலும் வெளிவந்தவை. மூன்றாவது தொகுப்பு இன்று இங்கே வெளியாகிறது.

இந்த மூன்று தொகுப்புகளையும் ஒருசேரப் பார்த்ததில் லாவண்யாவின் வளர்ச்சி தென்படுகிறது. முதல் தொகுப்பில் 56 கவிதைகள். 64 பக்கங்கள். இரண்டாவதில் 60 கவிதைகள்  80 பக்கங்கள். மூன்றாவதில் 68 கவிதைகள். 96 பக்கங்கள். அளவு ரீதியில் இது படிப்படியான வளர்ச்சிதான். ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 184 கவிதைகள் என்பது என்னைப் போன்ற வெளிப்பாட்டுக் கஞ்சனுக்குப் பொறாமை ஏற்படுத்தக் கூடியது. இந்தக் கவிதைகள் குணரீதியாக எப்படிவளர்ந்திருக்கின்றன , எந்த அளவு முன்னேறி இருக்கின்றன என்ற விஷயத்துக்குப் பிறகு வரலாம்.  பக்க எண்ணிக்கை யையும் கவிதை எண்ணிக்கையையும்  குறிப்பிட்டுச் சொல்லக் காரணம் லாவண்யா தொடர்ச்சியாகக் கவிதை எழுத்தின் மீது காட்டும் ஈடுபாடு; பெரும்பான்மைப் பொழுதுகளைக் கவிதையின் வரவுக்காகத் திறந்து வைத்திருக்கும் மனநிலை. இவை இரண்டையும் சுட்டிக் காட்டுவதற்காகவே இதைச் சொல்கிறேன். இந்த ஈடுபாடும் , மனநிலையும்தான் அவரைக் கவிதையாக்கத்துக்குத் தூண்டுகின்றன என நினைக்கிறேன். சரளமாகக் கவிதைகள் எழுதக் காரணம் என்று நினைக்கிறேன். அந்தச் சரளம்தான் அதிக எண்ணிக்கையில் எழுதவும் உத்வேகம் கொடுக்கின்றன. இந்தச் சரளமும் எண்ணிக்கைப் பெருக்கமும் தான் அவருடைய பலமும் பலவீனமும்.



லாவண்யாவுக்கு எல்லாமும் கவிதைக்கான பாடுபொருட்களாகின்றன. குளியறையில் நெளியும் மண்புழுவைப் பார்த்தாலும் கணினிப் பெட்டியில் கவிந்திருக்கும் கடிதங்களைப் பார்த்தாலும் பயணத்துக்காகக் காத்திருக்கும் குடும்பத்தைப் பார்த்தாலும் லாவண்யாவின் கவிதை ஊற்று மடை திறந்து பொங்கி விடுகிறது. அதை அந்தப் பொழுதின் உடனடி எதிர்வினைகளுடன் கவிதையாக்கி விடுகிறார். கவிதைகளின் இருப்பில் ஒரு எண்ணிக்கை கூடி விடுகிறது. இதில் மறைந்திருக்கும் பலமும் பலவீனங்களும் பற்றித் தான்  சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஏனெனில் இது லாவண்யா என்ற ஒரு கவிஞரின் பிரச்சனை மட்டுமல்ல; இன்று எழுதப் படும் பெரும் பாலான கவிதைகளின் சிக்கலும் கூட.

மிக அதிகமான எண்ணிக்கையில் கவிதைகள் எழுதப்படும் காலம் இது. இந்தத் தொகுப்புக்கான முன்னுரையில் நாஞ்சில்நாடன் கொஞ்சம் வருத்தத்துடன்  குறிப்பிடுகிறார். 'தமிழில் எழுத ஆளற்றுப் போய்க் கொண்டிருக்கிறது சிறுகதை. நாவல் வரத்து வறண்டு கொண்டிருக்கிறது' என்று. அவர் சொல்ல வரும் பின்  புலம் வேறு. நல்ல படைப்புகளை வகைப்படுத்தி தலித்தியம் பெண்ணியம் முற்போக்கு என்று காரணங்கள் தேடுவதைப் பற்றிய ஆதங்கத்தில் அதைச்  சொல்ல வருகிறார். அப்படி யெல்லாம் வகைப்படுத்தி லேபிள் ஒட்டிக் கொண்டு யாரும் எழுத வந்து விட முடியாதுதான். ஆனால் காலத்தையொட்டிக் கவிதையில் நிகழும் மாற்றங்கள்தாம் இந்த வகைமைகளை முன்வைக்கின்றன. அதையொட்டிய சிந்தனைகள்தான் புதிய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கின்றன.

தொண்ணூறு களின் இறுதியில் தொடங்கிப் பெரும் வீச்சை ஏற்படுத்தியவற்றில் பெண்ணெழுத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அப்படி ஒரு வீச்சு உருவாகாமல் இருந்தால், அந்த வகையில் சேர்க்கப்பட்ட கவிதைகள்  விவாதிக்கப்படாமல் இருந்தால் கவிதைப் பரப்பு இவ்வளவு விரிவாக ஆகியிருக்காது. கொஞ்சம் அதிகப்படியாகச்  சொன்னால் பெண்ணெழுத்துக்கு இவ்வளவு முதன்மை கற்பிக்கப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை  லாவண்யாவும் ரோஸ்லினும்  கவிதையாக்கத்துக்கு வராமலே இருந்திருக்கக் கூடும். இந்தச் சூழல் திறப்புதான் புதிய போக்குகளை நிகழ்த்தியிருக்கிறது. தலித்தியம் சார்ந்தும்  இந்த விஷயத்தை பொருத்திப் பார்க்கலாம்.

இந்தப் பரப்புத்தான் தற்காலக் கவிதையின் வலு என்று நினைக்கிறேன். அந்த வலுவை நிலை நிறுத்துவதுதான் தொடர்ந்து வரும் கவிஞர்களின் வேலையாக அமையும். இந்த வேலையை ஏற்கனவே உருவாக்கப்பட்ட போக்கிலேயே தொடர்வது, புதிய அம்சங்களுடன் தொடர்வது என்ற இரண்டு நிலைகளாகப் பார்க்கலாம். துரதிருஷ்டவசமாக தமிழில் முதலாவது நிலையே தொடர்கிறது. அது ஒரு புதிய கவிஞருக்கு எளிதாகவும் சௌகரியமாகவும் இருக்கிறது. தொண்ணூறுகளில் பெரும் வீச்சைக் காட்டிய பெண்நிலைக் கவிதைகளும் தலித்தியக் கவிதைகளும் இன்று தேக்கமடைந்து நிற்பது இதனால்தான். இது மொத்தக் கவிதை இயக்கத்தையும் தேங்கி நிற்கச் செய்கிறது. இதுதான் நமது கவிதையின் இன்றைய நிலை என்று நினைக்கிறேன். வெறும் டெம்ப்ளேட் கவிதைகள் தாம் இன்று நம்மிடையே அதிகம். இந்தச் சூழலில்தான் லாவண்யாவின் கவிதைகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. லாவண்யாவின் முதல் இரண்டு தொகுப்புகளுக்கும் ஒரு பொது இயல்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்தக் கவிதைகளின் மையமான பொருள் அன்பைத் தேடுவது. அல்லது அன்பைப் பற்றி வியப்பது. அன்பின்மை கண்டு வருந்துவது. இதை இரண்டாவது தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் சொல்லவும் செய்திருந்தேன். அன்பு, பிரியம் என்ற வார்த்தைகள் இல்லாமல் அவரால் கவிதை எழுதவே வராதோ என்று கூடத் தோன்றியிருந்தது. அதில் ஒரு கவிதையின் தலைப்பு பிரியங்களின் பிரியம் என்று இருந்தது என்றும் நினைவு. 'பெருங்கருணையோடிருக்கும்  பிரியங்களுக்கும் / ப்ரியத்தைத் தவிர / காரணிகள் வேறு எப்போதும் இல்லை/' என்று முந்தைய தொகுப்பில் இட்ம் பெற்ற கவிதை வரிகளையே லாவண்யாவின் பார்வையாகச் சொல்லலாம். இந்தத் தொகுப்புக் கவிதைகளில் பிரியம் இருக்கிறது. கூடவே பிரியத்தைப் பின்புலமாகக் கொண்டு வேறு பலவற்றை அறிந்து கொள்ளும் எத்தனம் இருக்கிறது. லாவண்யாவின் மூன்றாம் தொகுப்புக் கவிதைகள் முன்னேறியிருப்பது அல்லது வளர்ச்சியடைந்திருப்பது இந்த வகையில்தான்.

இரண்டு கவிதைகள் ஒப்பிட்டுச் சொல்வதன் மூலம் இந்த வித்தியாசத்தைச் சுட்டிக் காட்ட முடியும் என்று நினைக்கிறேன். 'நிராகரிப்பின் ரணத்தை' என்ற கவிதை முதல் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது.

அளவில்லாத அன்பு
ஆழமான பாசம்
நெஞ்சம் நிறைக்கும் நட்பு
தோட்டத்தில்
நிறைந்து பூக்கும் ரோஜா மல்லிகை
இன்ன பிறவென எல்லாம் கிடைத்தும்

எதைக் கொண்டும்
நிரப்ப முடிவதில்லை
யாரோவாகிப் போன
நீ தந்த நிராகரிப்பின் ரணத்தை.

இந்தக் கவிதையில் இருக்கும் தொனிக்கு முற்றிலும் மாறான அல்லது எதிரான தொனியில் எழுதப்பட்டிருக்கிறது புதிய தொகுப்பின் கவிதை 
 'அடையாளமற்றுப் போனவள்'  ( பக் 60 அறிதலின் தீ )


லாவண்யா சரளமாகக் கவிதை எழுதுகிறார். அதனாலேயே பல கவிதைகளில் கவிதையாக்கத்துக்குரிய நிதானம் கைவராமல் போகிறது. எடுத்துக் கொண்ட பாடுபொருள் பற்றி இன்னும் சிறிது சிந்தித்திருந்தால் மிகச் செறிவாக அமைந்திருக்கக் கூடிய பல கவிதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. அப்படிச் செய்வதை அவரது மனநிலை அல்லது கவிதை அவசரம் தடை செய்து விடுகிறது என்று தோன்றுகிறது. அவசரம் என்ற தலைப்பில் உள்ள கவிதையைப் பார்ப்போம். பக். 71. ஆனால் லாவண்யாவின் மொத்தக் கவிதை இயல்பு என்று இதுவல்ல. ஏனெனில் மிகுந்த நிதானமாகவும் சொற் தேர்ச்சியுடனும் அமைந்த கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. அவைதான் அவரைக் கவனத்துக்கு உரியவராக ஆக்குகின்றன.

முன்பே சொன்னதுபோல லாவண்யாவுக்கு எல்லாம் கவிதைக்கு உரியவைதான். கிணறு, மலை, பழைய புத்தகம், தாமதமாக வரும் பஸ் ... எல்லாமும் அவருக்குக் கவிதைக்குரிய பொருட்கள்தாம். கிணற்றுக்கும் அவருக்கும் ஏற்படும் மன நெருக்கம்  உடனடியாகக் கவிதையாகி விடுகிறது. இது கவிதை ஆகுமா? எப்படி ஆகும்? என்ற கேள்விகள் எதுவும் அவரிடம் எழுவதில்லை. அந்த மனநிலையை அப்படியே வார்த்தைகளில் இறக்கி வைத்து விடுவதுதான் அவர் செய்யும் வேலை. அந்த மன நிலையின் இயல்பான எழுச்சி குலையாமல் வேறு தளத்துக்குக் கவிதையை மேலேற்ற அவர் தயாராவதில்லை. 'மலையோடே இருக்கும் மலை' என்ற தலைப்பில் உள்ள கவிதை இன்னும் கொஞ்சம் சிந்திக்கப் பட்டிருந்தால் இப்போது இருப்பதை விட நேர்த்தியான கவிதையாக மாறியிருக்கும் என்று  தோன்றுகிறது.

இது லாவண்யாவின் சிக்கல் மட்டுமல்ல; இன்று எழுதப்படும் பல கவிதைகளின் சிக்கலும் கூட. இப்படிச் சொல்வதன்  அர்த்தம் கவிதையை  உட்கார்ந்து ராவி மினுக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல; கவிதையின் வரிகளை நமக்குள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால் கவிதை எளிமையாகத் தெரியும் மகா சிக்கலான வடிவம். சமகாலத்திய கவிதைகள் பழைய கவிதைக் கூறுகளிலிருந்து விடுபட்டு எளிமையான கூறுதலையே முதனமையாகக் கொண்டிருக்கின்றன. அதனாலேயே மிக அதிகமான கவிதைகள் எழுதப்படவும் செய்கின்றன. அதனாலேயே விரைவில் எந்தச் சுவடும் இல்லாமல் மறைந்தும் போகின்றன. அந்த ஆபத்திலிருந்து விடுபட்டிருப்பவை லாவண்யாவின் கவிதைகள் . இவை பெரும்பாலும் எளிமையானவை.  எளிமையை மீறி இன்னொரு தளத்தில் பொருள்படும் தொனியைக் கொண்டிருப்பவையும் கூட. முன்பே சொன்ன மலைக் கவிதையைப் பார்க்கலாம். இதில் இடம் பெறும் சொற்கள் இன்னும் வலுவானவையாக இருந்திருக்கலாம் என்ற குறையை மீறி இந்தக் கவிதையில் இன்னொரு பொருள் மிகவும் இயல்பாக உருவாகிறது. சொல்லப் பட்டதைக் கடந்த ஒன்றைச் சுட்டிக் காட்டுவதுதானே கவிதை? 2 X 2 = 4 என்பது  உண்மை. அதைச் சொல்வது வாய்ப்பாடு. ஆனால் 2 X 2 எப்படி நான்காகிறது என்பதைச் சொல்லத்தானே கவிதை? வீடு திரும்பும்போது உடன் வராத மலை மட்டும் அங்கேயே இருக்கக் கூடும்? ஏன் என்று வாசிப்பவனை யோசிக்க வைப்பதில்தான் இந்த வரிகள் கவிதையாகின்றன.

லாவண்யாவின் கவிதைகளில் அறைகூவல்களோ, வலியுறுத்தல்களோ இல்லை. பொதுவாகப் பெண்ணெழுத்துகளில் வெளிப்படும் முழக்கங்களோ பெண்ணிய சார்புகளோ அநேகமாக இல்லை. ‘பெண்ணிற்கான அடையாளம் எதையும் என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம்என்ற எச்சரிக்கையை தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒரு கவிதை முன்வைக்கிறது. தான் கவிதைக்குள் உருவாக்கும் உலகம் பொதுவானது என்ற எண்ணமே கவிதைகளின் மையமாக அமைகிறது. வியப்புக்குரிய வகையில் இந்த எண்ணத்தை மீறி எழுதப்பட்ட கவிதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.

பெண் தனது நிலையிலிருந்து பார்க்கும் உலகை, அல்லது பெண் தனது உலகைச் சொல்வதன் மூலம் விரிவடையும் பொது உலகைக் காட்டும் கவிதைகள்தாம் இந்தத் தொகுப்பின் சிறந்த கவிதைகளாக ஆகின்றன. ‘அடையாளம் துறக்கும் நேரம், இருளின் நிழல், பிரிவு, சமையல், ஆயுதக் காதல் போன்ற கவிதைகளை ஓர் ஆண் மனம் யோசிப்பது சாத்தியமில்லை.

பெண் நிலையிலிருந்தும் அதைக் கடந்தும் கவிதைகளை யோசிக்கிறார் என்பதே லாவண்யா சுந்தரராஜனின் பிரத்தியேகத் தன்மை என்று நினைக்கிறேன். பெண்நிலையிலிருந்து எழுதப்படுவனவற்றை பிடிவாதம் இல்லாமலும் மற்றவற்றை தற்பெருமை இல்லாமலும் கவிதை யாக்குவதுதான் அவரைக் கவனத்துக்குரியவராக்குகிறது. அவரது கவிதைகள் பலவற்றையும் முதலில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்த்த் தொகுப்பில் உட்படுத்தப்படாமல் இன்னொரு தொகுப்புக்கான கவிதைகள் அவரிடம் இருக்கின்றன. அது புத்தகமாக வெளிவரும் நிலையில் அதை பற்றி நானே பேச நேரிடலாம் என்பதை எச்சரிக்கையாகவும் விருப்பமாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

( மதுரையில் 30 ஆகஸ்ட் 2015 அன்று புனைவு இலக்கிய அமைப்பின் சார்பில் நடைபெற்ற நூல் அறிமுக நிகழ்ச்சியில் பேசியது)