சனி, 6 ஜனவரி, 2018

ஜஹனாரா



ந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும்  தீராத ஆர்வத்தைத் தூண்டக் கூடிய அத்தியாயம் வரலாற்றில் இருக்குமானால் அது இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்ற கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தை நாவலை எழுதும் வேளையில் சரியென்று உணர்ந்தேன். கருத்தை உணரும் வாய்ப்பை அளித்தது ஜஹனாரா என்ற பெயர். அந்தப் பெயரின் அறிமுகமும் அதையொட்டிய தேடலும் எதிர்பாராமல் நேர்ந்தவை.

1993  இறுதியிலும் 94  தொடக்கத்திலுமாகச் சில நாட்கள் தில்லியில் தங்கியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சாகித்திய அக்காதெமி நடத்திய மொழிபெயர்ப்புப் பட்டறையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். பணி முடிந்த மாலை நேரங்களில் நகரத்தின் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பது வழக்கமானது. சில நாட்கள் தனியாகவும். சில நாட்கள் இந்தி தெரிந்த இலக்கிய நண்பர்களுடனும். ஒருநாள் மாலை வங்க மொழிக் கவிஞரும் நண்பருமான அஞ்சென் சென்னுடன் தில்லி - மதுரா நெடுஞ் சாலையிலுள்ள நிஜாமுத்தீன் தர்கா வளாகத்தைப் பார்க்கச்  சென்றிருந்தேன். கல்லறைகளின் பெரும் பரப்பான அந்த இடத்தைச் சுற்றி வந்தோம். முகலாய மன்னர்களும் கவிஞர்களும் சூஃபி ஞானிகளுமான பலரின் சமாதிகளைப் பார்த்தேன். சில சமாதிகளின் அருகில் கூட்டம் இருந்தது. அஞ்சலிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தன. பிரார்த்தனை செய்பவர் களும்  சுவரில் முகம்புதைத்து கண்ணீர் மல்க ஆத்மாக்களிடம் முறையிடு பவர்களும் இருந்தார்கள். ஆட்கள் சீந்தாத இரண்டு சமாதிகள் கவனத்தில் பதிந்தன. கவிஞரான அமீர்குஸ்ரூவின் கபரும் ஜஹனாரா பேகத்தின் கபரும். கவிஞர் என்று தெரிந்து வைத்திருந்ததனாலும் அவர் எழுதிய கஜல்கள் சிலவற்றை உயிர் உருகக் கேட்டிருந்ததனாலும்  குஸ்ரூவின் அடக்க இடம் முக்கியமானதாகத் தோன்றியது. அதற்குச் சிறிது தொலைவில் சலவைக் கல் ஸ்தூபியும் திறந்த சமாதியுமாக இருந்த இடம் அதன் தோற்றத்தின் காரணமாக ஆர்வத்தைத் தூண்டியது. பொதுவாக இஸ்லாமியர்களின் சமாதிகள் மூடிவைக்கப்பட்டவை. நான் பார்த்த சமாதி திறந்து வைத்த பேழைபோலத் தென்பட்டது. அந்த வித்தியாசம் விவரத்தை அறியத் தூண்டியது.  தலைப்பகுதியிலிருந்த ஸ்தூபியில் எழுதப்பட்டிருந்த  வாசகங்கள் புதிராக வசீகரித்தன.  அஞ்சென் சென்னின் உதவியுடன் விசாரித்தபோதுதான் அது ஜஹனாராவின் சமாதி என்று அறிந்து கொள்ள முடிந்தது. அவளைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டேன். முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ஒருத்தி அந்த வெள்ளிக் கிழமை மாலை என் மனதுக்குள் புகுந்தாள். நீங்காத நிழலாக நினைவில் உறைந்தாள்.

தொடர்ந்து வாசிப்பவன் நான். வாசிப்பில் ஒவ்வொரு பருவத்திலும் ஏதோ ஒரு வகை முதன்மையானதாக இருக்கும். அவ்வாறான வாசிப்பில் சூஃபி இலக்கியமும் இசையும் ஒரு தருணத்தில் முக்கியத்துவம் பெற்றன. அப்போது  ஜஹனாராவை மீண்டும் நினைவு கூர்ந்தேன். முன்பு அவளைப் பற்றிய விவரங்களைச் சொன்ன நிஜாமுத்தீன் தர்கா அறக் கட்டளையைச் சேர்ந்த இமாம்  சூஃபி மரபைப் பின்பற்றியவர்கள் என்று குறிப்பிட்ட பெயர்களில் ஜஹனாராவும் இருந்தது நினைவுக்கு வந்தது. வானத்தைப் பார்க்கும் விதமாகத் தனது சமாதி திறந்திருக்க வேண்டும். அதற்கு ஆடம்பரம் கூடாது. அதன் மேற்பரப்பில் புற்கள் படர்ந்திருப்பதே போதுமானது என்ற அவள் விருப்பமே சலவைக்கல் ஸ்தூபியில் பொறிக்கப்பட்டிருக்கிறது.  அது ஒரு சூஃபி மனப்பாங்கு  என்றெல்லாம் அவர் விளக்கினார். 

இந்தியாவில் பிரதானமான சூஃபி மரபை வலுப்படுத்திய  காஜா மொய்னுத்தீன் சிஷ்டியின் மாணவி என்று  ஸ்தூபி வாசகத்தில் ஜஹனாரா தன்னை அடையாளம் காட்டுகிறாள். அரச போகங்களிலிருந்தும் அதிகார யுத்தங்களிலிருந்தும் விடுபட்டு அந்த மார்க்கத்தில்  சேர விரும்பினாள். ஆனால்  சிஷ்டிமரபு  அன்று பெண்களுக்கு விலக்குக் கற்பித்திருந்தது.  எனவே ஜஹனாராவின் விருப்பம்  நிறைவேறவில்லை. இந்தத் தகவல்களையும் இமாம் தெரிவித்தார். அவை மீண்டும் நினைவுக்கு வந்தபோது ஜஹனாரா எனக்குள் உயிர்த்தெழுந்தாள். அவளைப் பற்றி ஒரு கவிதை எழுதுவது மட்டுமே அப்போது என் ஆசை. அதற்காக முற்பட்டபோது புரிந்தது:  ஜஹனாரா ஒற்றைக் கவிதைக்குள் அடங்குபவள் அல்ல. 



                             வெளிவர இருக்கும் நாவல் ‘பெருவலி’ க்கு எழுதிய பின்னுரையின் சில பகுதிகள் இவை.

ஓவியம் : ரோஹிணி மணி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக